Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து பணம் பறித்தவர் கைது

வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து பணம் பறித்தவர் கைது

வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து பணம் பறித்தவர் கைது

வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து பணம் பறித்தவர் கைது

ADDED : ஜூன் 30, 2024 02:32 AM


Google News
Latest Tamil News
வடலுார்:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இயங்கி வரும் தனியார் கல்லுாரிக்கு, கடந்த, 23ம் தேதி காரில் வந்த நபர் ஒருவர், வருமான வரித்துறை அதிகாரி என, தன்னை அறிமுகம் செய்து, கோப்புகளை ஆய்வு செய்தார். கல்லுாரி நிர்வாகியிடம், கோப்புகள் சரியாக இருப்பதாக கூறி, ஊரில் கட்டி வரும் கோவிலுக்கு நன்கொடை கேட்டார். கல்லுாரி நிர்வாகத்தினர், 32,000 ரூபாய் கொடுத்தனர்.

அப்போது, தனக்கு வருமானவரி துறை உயர் அதிகாரிகள் பலரை தெரியும். யாருக்காவது வேலை தேவைப்பட்டால் வாங்கி தருவதாக கூறினார். அப்போது, கல்லுாரி நிர்வாகி ஒருவர் தன் உறவினருக்கு வேலை வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு அவர், 3 லட்சம் ரூபாய் கேட்டார்.

பின்னர், இதே கல்லுாரி நிர்வாகத்தின் கீழ் குறிஞ்சிப்பாடியில் இயங்கும் பள்ளிக்கு சென்று இதே பாணியை பின்பற்றி, கோப்புகளை ஆய்வு செய்து, 10,000 ரூபாய் பெற்றுள்ளார்.

அவர் அனுப்பிய வருமான வரித்துறை பணி ஆணையை ஆய்வு செய்த போது, அது போலியானது என, தெரிந்தது. இதையடுத்து, பேசியபடி, 3 லட்சம் ரூபாய் பெற வந்த நபரை, கல்லுாரி நிர்வாகத்தினர் குறிஞ்சிப்பாடி போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.

விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த சந்திரசேகரன், 75, என்பதும், எம்.இ., பட்டதாரியான இவர், 28 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசிப்பதும் தெரிந்தது.

சென்னையில் சொகுசு ஹோட்டலில் தங்கி, வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு, தமிழகம் முழுதும் இப்படி பணம் பறித்தது தெரியவந்தது. இவர் மீது கரூர், மணப்பாறை, விராலிமலை, சத்தியமங்கலம் உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us