Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதியில் நிலங்களில் மீண்டும் ஒயர் திருட்டு

தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதியில் நிலங்களில் மீண்டும் ஒயர் திருட்டு

தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதியில் நிலங்களில் மீண்டும் ஒயர் திருட்டு

தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதியில் நிலங்களில் மீண்டும் ஒயர் திருட்டு

ADDED : ஜூன் 23, 2025 11:50 PM


Google News
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதிகளில், விவசாய நிலங்களில் மீண்டும் ஒயர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாய நிலங்களில் மின்மோட்டார் பயன்பாடு மற்றும் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன், விவசாய நிலங்களில் அமைத்திருந்த மோட்டார் ஒயர்களை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வெட்டி திருடிச் செல்வது தொடர்கதையாகி வந்தது.

தொண்டாமுத்துார், ஆலாந்துறை, பேரூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதன்பின்பும், தொடர் ஒயர் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன.

இச்சம்பவங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் வரை விவசாயிகள் முறையிட்டனர். அதனையடுத்து இரவு ரோந்து பணிகளை போலீசார் அதிகரித்து, ஒயர் திருட்டியில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில் ஒயர் திருட்டு சம்பவங்கள் வெகுவாக குறைந்தன.

இந்நிலையில், தொண்டாமுத்துார் சுற்றுப்பகுதிகளில் ஒயர் திருட்டு சம்பவங்கள் மீண்டும் நடக்கத் துவங்கியுள்ளது. தேவராயபுரம், பாசமடைக்குட்டை பகுதி, புள்ளாகவுண்டன்புதுார், கொண்டையம்பாளையம், ஓணாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில், இரவு நேரங்களில் புகும் மர்ம நபர்கள், மின்மோட்டார் ஒயர்கள், மின்வேலிக்காக பயன்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் சார்ஜர் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றுள்ளனர். இரவு ரோந்து பணியை அதிகரிப்பதோடு, ஒயர் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us