Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரண்டு முறை திட்டமிட்டும் திறக்கப்படாத வனவிலங்கு மறுவாழ்வு மையம்; காட்டு யானைகள் இறப்பு தடுக்கப்படுமா?

இரண்டு முறை திட்டமிட்டும் திறக்கப்படாத வனவிலங்கு மறுவாழ்வு மையம்; காட்டு யானைகள் இறப்பு தடுக்கப்படுமா?

இரண்டு முறை திட்டமிட்டும் திறக்கப்படாத வனவிலங்கு மறுவாழ்வு மையம்; காட்டு யானைகள் இறப்பு தடுக்கப்படுமா?

இரண்டு முறை திட்டமிட்டும் திறக்கப்படாத வனவிலங்கு மறுவாழ்வு மையம்; காட்டு யானைகள் இறப்பு தடுக்கப்படுமா?

ADDED : மே 24, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே வனப்பகுதியில் அமைத்துள்ள, வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை திறக்க இரண்டு முறை திட்டமிட்டும் பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகம், பெத்திக்கொட்டை மோதூர் வனப்பகுதியில், 120 ஏக்கரில், வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த, உடல் நலம் பாதித்த வனவிலங்குகளான, யானைகள், சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டு மாடுகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் குணமாகும் வரை மறுவாழ்வு மையத்தில், பாதுகாப்புடன் பராமரிக்க, தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, குடியிருப்புகள், பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வனவிலங்கு அறுவை சிகிச்சை அரங்கு, மருத்துவ சிகிச்சை கூடம், ஒவ்வொரு வனவிலங்கிற்கும் தனித்தனியாக அடைக்க, பாதுகாப்பு கம்பி வேலி போட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய யானைகளுக்கும், குட்டி யானைகளுக்கும் பயிற்சி அளிக்கும் கரால் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் இதுஅமைக்கப்பட்டுள்ளதால், மற்ற வனவிலங்குகள் உள்ளே வராமல் இருக்க, சுற்றியும் அகழி வெட்டப்பட்டுள்ளது.

அதிலிருந்து சிறிது தூரம் தள்ளி இரண்டு அடுக்கு, தொங்கும் சோலார் மின்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதன்முறையாக வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சிறுமுகை அருகே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் திறப்பு விழாவுக்கு, இரண்டு முறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் திறக்காமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சக்திவேல் கூறியதாவது: சிறுமுகையில், 20 கோடி ரூபாய் செலவில், வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதித்த யானையை இந்த மையத்தில் வைத்து, முறையான சிகிச்சை அளித்து இருந்தால், காப்பாற்றி இருக்க வாய்ப்புள்ளது.

எனவே மறுவாழ்வு மையம் அமைத்த தமிழக அரசு, அதற்கான டாக்டர்கள், பணியாளர்கள் உடனடியாக நியமிக்காமலும், மையம் திறக்கப்படாமலும் காலம் கடத்தி வருவது, அரசின் மெத்தனப் போக்கை காட்டுகிறது. என்ன நோக்கத்திற்காக இந்த மையம் அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகிறது.

எனவே இந்த மையத்தை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us