Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு கல்லுாரியில் விடுதி வசதியில்லை; வெளியூர் மாணவர்கள் அட்மிஷன் 'டல்'

அரசு கல்லுாரியில் விடுதி வசதியில்லை; வெளியூர் மாணவர்கள் அட்மிஷன் 'டல்'

அரசு கல்லுாரியில் விடுதி வசதியில்லை; வெளியூர் மாணவர்கள் அட்மிஷன் 'டல்'

அரசு கல்லுாரியில் விடுதி வசதியில்லை; வெளியூர் மாணவர்கள் அட்மிஷன் 'டல்'

ADDED : ஜூன் 27, 2025 09:25 PM


Google News
வால்பாறை; வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், விடுதி இல்லாததால், வெளியூர் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

வால்பாறையில், கடந்த, 2006ம் ஆண்டு முதல் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வந்தது. கடந்த, 2020ம் ஆண்டு முதல் அரசு கலைக்கல்லுாரியாக மாற்றப்பட்டது.

ஆரம்பத்தில், கல்லுாரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். சமீப காலமாக, மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் சரிந்து கொண்டே வருகிறது.

கல்லுாரியில் மொத்தம் உள்ள, 520 சீட்களுக்கு, 9 பாடப்பிரிவுகளின் கீழ் இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகாக 'ஆன்லைன்' வாயிலாக, மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது, நேரடி அட்மிஷன் நடக்கிறது. ஆனால், இது வரை, 150 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஹாஸ்டல் வசதி இல்லாததால், வெளியூர் மாணவர்கள் கல்லுாரியில் சேர தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:

வால்பாறையில், வனவிலங்கு - மனித மோதல், சம்பள பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் எஸ்டேட் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால், கல்லுாரியில் உள்ளூர் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கல்லுாரியில் சேர விரும்புகின்றனர். ஆனால், விடுதி வசதி இல்லாததால் வெளியூர் மாணவர்கள் சேர தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும், மாணவியருக்கு தனி விடுதி வசதி உள்ளது போன்று, மாணவர்களுக்கும் விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும், என, மாவட்ட கலெக்டரிடம் நேரில் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us