Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தயாராகிறது சர்வதேச ஹாக்கி மைதானம் 13 ஆண்டு இழுபறி திட்டம் நிறைவேறும் தருணம்

தயாராகிறது சர்வதேச ஹாக்கி மைதானம் 13 ஆண்டு இழுபறி திட்டம் நிறைவேறும் தருணம்

தயாராகிறது சர்வதேச ஹாக்கி மைதானம் 13 ஆண்டு இழுபறி திட்டம் நிறைவேறும் தருணம்

தயாராகிறது சர்வதேச ஹாக்கி மைதானம் 13 ஆண்டு இழுபறி திட்டம் நிறைவேறும் தருணம்

ADDED : ஜூன் 20, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், சர்வதேச தரத்துக்கு ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 13 ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் இத்திட்டம் விரைவில் நிறைவேறப் போகிறது.

கோவையில், 1,000க்கும் மேற்பட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். இவர்கள் பயிற்சி பெற, அரசு தரப்பில், மைதான வசதி செய்து தர கோரிக்கை விடப்பட்டது.

இதை நிறைவேற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முயற்சித்தபோது, போதிய இடம் கிடைக்காமல் தவித்தது. இதையறிந்த, கோவை மாநகராட்சி நிர்வாகம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள் இடம் ஒதுக்கி, சர்வதேச தரத்துக்கு, மைதானம் அமைத்து தருவதாக, 2013ல் உறுதியளித்தது.

முதலில், ரூ.2.25 கோடியில், 92 மீட்டர் நீளம், 53 மீட்டர் அகலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது; பின், ரூ.4.5 கோடியாக மதிப்பீடு மாற்றப்பட்டு, 2016-ல் மீண்டும் பணி துவங்கியது. தளம் அமைப்பதற்கான 'டர்ப்', வெளிநாட்டில் இருந்து தருவிக்க தாமதமானதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.19.5 கோடி கேட்டு, திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த 'டுபிட்கோ', அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகள் எழுப்பி, நிதி ஒதுக்க மறுத்ததால், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கவனத்துக்கு இத்திட்டம் குறித்து சொல்லப்பட்டதும் பழைய கோப்புகள் துாசி தட்டப்பட்டன. முதலில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

பின், மாநகராட்சி பொது நிதியில் செலவழித்துக் கொள்ள அனுமதி கொடுத்த தமிழக அரசு, இப்பணியை மாநகராட்சியே மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி, 6,500 சதுரடி மீட்டர் பரப்பளவில், ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம் உருவாக்கப்படுகிறது.

செயல் விளக்கம்


தற்போது மைதானத்தைச் சுற்றிலும் கம்பி வலை அமைக்கப்படுகிறது. போட்டி துவங்குவதற்கு முன், மைதானம் முழுவதும் ஒரே அளவாக சமச்சீராக தண்ணீர் தெளிப்பது வழக்கம்.

அதற்காக, நீர் பீய்ச்சியடிக்கும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, நேற்று முன்தினம் செயல்விளக்கம் பார்க்கப்பட்டது. இனி, சர்வதேச தரத்துக்கு செயற்கை புல்வெளி தளம் அமைக்கப்பட உள்ளது.

விளையாட்டு வீரர்கள் ஓய்வெடுக்க மற்றும் உடை மாற்றும் அறைகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க கேலரி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.

2026 சட்டசபை தேர்தலுக்கு முன், பணியை முழுமையாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு முடிந்தால், 13 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த திட்டம் நிறைவேறியமகிழ்ச்சி, ஹாக்கி வீரர்களுக்கு ஏற்படும்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us