Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில் பாதை அருகே டாஸ்மாக் கடை; என்று தீரும் துயரம்... போதையில் மரணிக்கும் 'குடி'மகன்கள்

ரயில் பாதை அருகே டாஸ்மாக் கடை; என்று தீரும் துயரம்... போதையில் மரணிக்கும் 'குடி'மகன்கள்

ரயில் பாதை அருகே டாஸ்மாக் கடை; என்று தீரும் துயரம்... போதையில் மரணிக்கும் 'குடி'மகன்கள்

ரயில் பாதை அருகே டாஸ்மாக் கடை; என்று தீரும் துயரம்... போதையில் மரணிக்கும் 'குடி'மகன்கள்

ADDED : செப் 09, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையம் ரோட்டில் ரயில் பாதை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை பிரிவிலிருந்து ஒன்னி பாளையம் ரோட்டில் ரயில் பாதை அருகே டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடையையொட்டி கோவை-மேட்டுப்பாளையம் ரயில் பாதை உள்ளது. இதில் தினமும், 10 முறை பாசஞ்சர் ரயில் கடந்து செல்கிறது.

இது தவிர, காலை, மாலை நீலகிரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. டாஸ்மாக் கடையில் இருந்து வெகு அருகில் ரயில் பாதை உள்ளதால், போதை தலைக்கு ஏறிய 'குடிமகன்கள்', ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து, தள்ளாடுவது வழக்கமாக உள்ளது.

ரயில் வருவது தெரியாமல், அதில், அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ரயில் பாதை அருகே செயல்படும் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் என, பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் மனுக்கள் கொடுத்தும், எவ்வித பயனும் இல்லை. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,' இந்த டாஸ்மாக் கடையை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளும், கிராமங்களும் இருப்பதால், இங்கு தினசரி வியாபாரம் களை கட்டுகிறது. இதனால் இறப்பு குறித்து மாவட்ட நிர்வாகமோ, டாஸ்மாக் நிர்வாகமோ கவலைப்படாமல், வணிகமே முக்கியம் என, கருதுகிறது. இதனால் உயிர் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடனடியாக இந்த மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் கூறுகையில்,' ஒன்னிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை ஒட்டி உள்ள ரயில் பாதையில், போதையில் குடிமகன்கள் நடமாடுவதை தடுக்க, அவ்வப்போது ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் முதல் வடகோவையில் உள்ள கங்கா மருத்துவமனை வரை, 35 கி.மீ., நீளம் ரயில் பாதை மேட்டுப்பாளையம் ரயில்வே துறையின் கண்காணிப்பில் உள்ளது.

இதில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரயிலில் அடிபட்டு, 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான நபர்கள், குடிபோதையில் ரயில் தண்டவாளத்தை கடந்தது தெரிய வந்தது. பிரச்சனைக்குரிய கோட்டை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையையொட்டி, கடந்த 6 மாதத்தில் ரயிலில் அடிபட்டு 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையிலிருந்து, ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு செல்ல முள்வேலி அமைக்கப்பட்டது. அவை ஒரு சில மாதங்களே தாக்குப் பிடித்தன.

தற்போது மீண்டும் குடிமகன்கள், ரயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது அருந்தும் பழக்கம் தொடர்கிறது. டாஸ்மாக் கடையை இப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றுவதே குடிமகன்களின் உயிரிழப்பு பிரச்சனையை தடுக்க நிரந்தர தீர்வாக இருக்கும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us