Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடியிருப்புகளுக்கு அருகே செயல்படும் கல்குவாரி; உரிமத்தை ரத்து செய்ய மன்றாடும் விவசாயிகள்

குடியிருப்புகளுக்கு அருகே செயல்படும் கல்குவாரி; உரிமத்தை ரத்து செய்ய மன்றாடும் விவசாயிகள்

குடியிருப்புகளுக்கு அருகே செயல்படும் கல்குவாரி; உரிமத்தை ரத்து செய்ய மன்றாடும் விவசாயிகள்

குடியிருப்புகளுக்கு அருகே செயல்படும் கல்குவாரி; உரிமத்தை ரத்து செய்ய மன்றாடும் விவசாயிகள்

ADDED : மே 31, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
கோவை; போத்தனுார் செட்டிபாளையத்தில், விதிமுறையை மீறி, குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி இயங்க உரிமம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கலெக்டரிடம் நேற்று முறையிட்டனர்.

கோனை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி தலைமையில், போத்தனுார் செட்டிபாளையம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த விவசாயிகள், குடும்பத்தோடு வந்திருந்தனர்.

குடியிருப்பு பகுதிக்குள் விதிமுறையை மீறி கல்குவாரி செயல்படுவதற்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. குவாரிகளில் வெட்டப்படும் கற்கள் விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் விழுகிறது என முறையிட்டனர்.

கலெக்டரிடம் விவசாயிகள் கூறியதாவது:

கிருஷ்ணராயபுரம் தோட்ட சாலை பகுதிகளில் பூர்வீகமாக வசித்து வருகிறோம், விவசாயம், ஆடு, மாடு மேய்த்து வருகிறோம். எங்கள் நிலத்துக்கு அருகில் கல் குவாரி நடக்கிறது. அவர்கள் உரிமம் பெற விண்ணப்பித்த நாளில் இருந்து, ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்து வருகிறோம். அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது வேறொருவருக்கு நிலத்தை விற்று விட்டதாக கூறி, வெடி வைத்து கல் எடுக்கும் பணியை செய்து வருகின்றனர். குவாரியில் வெடி வைத்ததில், கற்கள் சிதறி, எங்கள் வீட்டிலும், தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு அருகிலும் விழுந்தது. செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம்; இரண்டு மாதமாக வேலை நடைபெறவில்லை.

மீண்டும் வெடி வைக்க ஆயத்தமாகியதால், ஆட்சேபனை தெரிவித்தோம். செட்டிபாளையம் போலீசாரை அழைத்து வந்து, வேலையை தடுக்கக் கூடாது; மீறினால் எங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் தொணியில் பேசினர். இதுதொடர்பாக, விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

இதுதொடர்பாக, வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

'அதிகாரிகள் பொய் அறிக்கை'

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''குடியிருப்புகளுக்கு அருகில் கல் குவாரி செயல்பட அனுமதி தரக்கூடாது; தற்போது குவாரி செயல்படும் இடத்துக்கு, 70 மீட்டர் துாரத்தில் குடியிருப்புகள் உள்ளன. அதை மறைத்து உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த உரிமத்தை ரத்து செய்ய கனிம வளத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.அதிகாரிகள் பொய்யான அறிக்கை கொடுப்பதால், கலெக்டரே நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமென, கிராம மக்கள் கோருகின்றனர்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us