Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சிக்கினார்; வீட்டுமனை வரன்முறைபடுத்த பேரம்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சிக்கினார்; வீட்டுமனை வரன்முறைபடுத்த பேரம்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சிக்கினார்; வீட்டுமனை வரன்முறைபடுத்த பேரம்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் சிக்கினார்; வீட்டுமனை வரன்முறைபடுத்த பேரம்

ADDED : செப் 11, 2025 09:37 AM


Google News
Latest Tamil News
அன்னுார்; மனை வரன்முறைப்படுத்த பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கையும் களவுமாக சிக்கினார்.

கோவை மாவட்டம்,கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம் ராஜா, 42. இவர் மனைவிக்கு சொந்தமான நான்கு சென்ட் இடம், எஸ். எஸ்.குளம் ஒன்றியத்தில், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் உள்ளது. இந்த வீட்டுமனையை வரன்முறை படுத்துவதற்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளார்.

எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற ஆவணங்கள் உத்தரவுக்குப் பிறகு மீண்டும் கொண்டையம்பாளையம் ஊராட்சிக்கு வந்துள்ளன. எனினும் இதற்கான உத்தரவை தராமல் ஊராட்சி செயலர் முத்துச்சாமி, 48, இழுத்தடித்துள்ளார்.

இதையடுத்து விக்ரம் ராஜா பேசிய போது 12 ஆயிரம் ரூபாய் தந்தால் உத்தரவு தருவதாக முத்துச்சாமி கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி பத்தாயிரம் ரூபாய் தருவதாக முடிவானது.

இது குறித்து விக்ரம் ராஜா, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை விக்ரம் ராஜாவிடம் கொடுத்தனர்.

நேற்று மதியம் 2:00 மணிக்கு விக்ரம் ராஜா கொண்டையம்பாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி செயலர் முத்துச்சாமியிடம் ரசாயனம் கலந்த பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.

முத்துச்சாமி அதை வாங்கியவுடன் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், எழிலரசி மற்றும் போலீசார் முத்துசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் நள்ளிரவு வரை அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். இன்று அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார், என போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us