/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடைத்துறை மானிய திட்டம் பயனாளிகள் தேர்வு முறை மாற்றம் கால்நடைத்துறை மானிய திட்டம் பயனாளிகள் தேர்வு முறை மாற்றம்
கால்நடைத்துறை மானிய திட்டம் பயனாளிகள் தேர்வு முறை மாற்றம்
கால்நடைத்துறை மானிய திட்டம் பயனாளிகள் தேர்வு முறை மாற்றம்
கால்நடைத்துறை மானிய திட்டம் பயனாளிகள் தேர்வு முறை மாற்றம்
ADDED : மே 24, 2025 05:58 AM
பொள்ளாச்சி : கால்நடைத்துறையில், மானிய திட்டங்களை பெறுவதற்கு, இலக்கு நிர்ணயித்து பயனாளிகள் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கால்நடைத்துறை வாயிலாக கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், நிதியுதவி வழங்கி தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள் உருவாக்குதல், வைக்கோல், ஊறுகாய்ப்புல், மொத்த கலப்பு உணவு மற்றும் தீவன சேமிப்பு வசதிகள், பண்ணையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த, 2024-25ம் நிதியாண்டில், 3,000 பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், புல் நறுக்கும் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 4.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தற்போது, மாவட்டந்தோறும், விண்ணப்பித்து, 50 சதவீதம் பணம் செலுத்திய பயனாளிகளுக்கு, புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டும் வருகிறது.
இதற்காக, கோட்ட அளவில், இலக்கு நிர்ணயித்து, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, அந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தகுதியான பயனாளி, யாராக இருந்தாலும், அவர் விண்ணப்பிக்கும் போது, உடனே அரசின் சேவை கிடைக்க, வழிவகை செய்ய வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கால்நடைத்துறையில் மானிய திட்டங்கள் செயல்படுத்துவதில் இலக்கு நிர்ணயித்து, பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது, தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கும் போது, முறையாக பரிசீலித்து, அரசின் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் வாயிலாக, விவசாயிகள் பலர் பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.