Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய கூலி உயர்வு கிடைத்ததா? விபரம் கேட்கிறது விசைத்தறி கூட்டமைப்பு

புதிய கூலி உயர்வு கிடைத்ததா? விபரம் கேட்கிறது விசைத்தறி கூட்டமைப்பு

புதிய கூலி உயர்வு கிடைத்ததா? விபரம் கேட்கிறது விசைத்தறி கூட்டமைப்பு

புதிய கூலி உயர்வு கிடைத்ததா? விபரம் கேட்கிறது விசைத்தறி கூட்டமைப்பு

ADDED : மே 12, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
சோமனுார்; ''புதிய கூலி உயர்வு கிடைத்ததை உறுதி செய்யும் வகையில், வரவு - செலவு விபரங்களை வரும், 16ம் தேதிக்குள் சங்க தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சோமனுாரில் நடந்தது. சோமனுார் சங்க தலைவர் பூபதி தலைமை வகித்தார்.

அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி, புதுப்பாளையம் தலைவர் நடராஜ், தெக்கலுார் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

புதிய கூலி உயர்வு பெற்று தர நடவடிக்கை எடுத்த முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டமைப்பு நிர்வாகிகள் பூபதி, பொன்னுசாமி ஆகியோர் கூறியதாவது: முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவின் படி, சோமனுார் ரகத்துக்கு, 15 சதவீதமும், மற்ற பகுதிகளுக்கு, 10 சதவீத கூலி உயர்வும் ஒப்பந்தம் செய்யப்பட்டுளள்து.

கடந்த, 21ம் தேதி முதல் புதிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்தி, விசைத்தறியாளர்களை பாதுகாக்க வேண்டும். வரும், 16ம் தேதிக்குள் புதிய கூலி உயர்வு கிடைத்ததை உறுதி செய்யும் வகையில், வரவு, செலவு விபரங்கள், பில் விபரங்களை அந்தந்த பகுதி சங்க தலைமையிடம் விசைத்தறியாளர்கள் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் இருந்தால், அதுகுறித்த விபரங்களை அளிக்க கோரியுள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us