சைக்கிளில் சென்ற முதியவர் பலி
கஸ்துாரி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 78. இவர் தனது சைக்கிளில் இடையர்பாளையம் - வடவள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வடவள்ளியை சேர்ந்த விவேகானந்தசாமி, 42 என்பவர் தனது 'போலேரோ' காரை அதிவேகமாக ஓட்டி வந்து முதியவர் மீது மோதினார். இதில் கீழே விழுந்த முதியவருக்கு தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சட்ட விரோதமாக மது விற்றவருக்கு சிறை
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் காலை8:00 மணிக்கு போத்தனுார், கோணவாயக்கால் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து கொண்டிருந்தது. மது விற்பனையில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த மும்மூர்த்தி, 44 என்பரை கைது செய்து, அவரிடம் இருந்து, 80 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 7,400 பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.
தாய் - மகளை மிரட்டியவர்கள் கைது
பி.என்.புதுார், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் கமலா, 56. இவர்களது எதிர் வீட்டில் அந்தோணி, 48 என்பவர் வசித்து வருகிறார். இரு வீட்டார் இடையே அடிக்கடி சிறு சிறு பிரச்னைகள் வருவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், கமலா தனது வீட்டு நாயை வெளியே அழைத்து சென்றார். அப்போது, அந்தோணியின் வீட்டு அருகில் உள்ள காலி இடத்தில் சிறுநீர் கழித்தது. இதைப்பார்த்த அந்தோணி, தனது நண்பர் சதீஸ்குமாரை, 48 அழைத்து கொண்டு, கமலாவின் வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்த, கமலாவின் மகள் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தபோது, அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். கமலா அளித்த புகாரில், ஆர்.எஸ்.புரம் போலீசார்,அந்தோணி மற்றும் சதீஷ்குமாரை கைது செய்து,சிறையில் அடைத்தனர்.