Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனரா வங்கியின் அறிவிப்பு சிறப்பு; பிறவங்கிகளிலும் அமல்படுத்தப்படுமா?

கனரா வங்கியின் அறிவிப்பு சிறப்பு; பிறவங்கிகளிலும் அமல்படுத்தப்படுமா?

கனரா வங்கியின் அறிவிப்பு சிறப்பு; பிறவங்கிகளிலும் அமல்படுத்தப்படுமா?

கனரா வங்கியின் அறிவிப்பு சிறப்பு; பிறவங்கிகளிலும் அமல்படுத்தப்படுமா?

ADDED : ஜூன் 04, 2025 08:34 PM


Google News
--- நமது நிருபர் -

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, கனரா வங்கி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், மக்களின் வசதிக்காக, மற்ற வங்கி நிர்வாகங்களும் இதுபோல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடன் வழங்குதல் உட்பட பல சேவைகளை, வங்கிகள் வழங்கி வந்தாலும், வாடிக்கையாளர் வைத்துள்ள சேமிப்பு கணக்குகளில், குறிப்பிட்ட தொகை குறைந்தபட்ச சேமிப்பாக இருக்க வேண்டும். தவறினால், அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில், 11 பொதுத் துறை வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் நேரடி நலத்திட்ட உதவிகளுக்காக துவக்கப்பட்ட, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளிலும், ஜீரோ பேலன்ஸ் கணக்கிலும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

2020ம் ஆண்டு, குறைந்தபட்ச இருப்பு தொகையை, சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பராமரிக்க தேவையில்லை என்ற உத்தரவை, எஸ்.பி.ஐ., நிர்வாகம் அறிவித்தது. தற்போது, கனரா வங்கியும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கணக்கு வைத்திருப்பவர்கள், மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிட்டாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், நடப்பு மாதம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள், இதனால் நிம்மதியடைந்துள்ளனர்.

'மினிமம் பேலன்ஸ் அபராதம் கூடாது'

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், ''கனரா வங்கியின் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. பொதுமக்கள், தங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்கும் நிலையில், இருப்பு குறைந்ததற்காக அபராதம் வசூலிக்கக் கூடாது என, எங்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து வங்கி நிர்வாகங்களும், மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிட்டால், அபராதம் வசூலிக்கப்படாது என அறிவித்தால், வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிக்கும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us