Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க., ஆதரவு; 238 பணியாளர்கள் கைது

துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க., ஆதரவு; 238 பணியாளர்கள் கைது

துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க., ஆதரவு; 238 பணியாளர்கள் கைது

துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு அ.தி.மு.க., ஆதரவு; 238 பணியாளர்கள் கைது

ADDED : ஜூன் 13, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
கோவை; கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி வழங்கக்கோரி, கோவையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்களில், 125 பெண்கள் உட்பட, 238 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மாநகராட்சி தரப்பில், நான்கு கட்டமாக பேச்சு நடத்தப்பட்டது. தினக்கூலியாக, 680 ரூபாய் வழங்க உறுதி அளித்ததை, சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. மற்ற சங்கத்தினர், கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 வழங்க வேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தினர். அத்தொகை வழங்க, ஒப்பந்த நிறுவனமும், மாநகராட்சியும் முன்வராததால், பேச்சு தோல்வி அடைந்தது.

தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் சங்கம், கோவை மாநகராட்சி அண்ணா சுகாதார பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு துாய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம், கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் துாய்மை தொழிலாளர் சங்கம், தமிழக வெற்றிக் கழகம் தொழிற்சங்க பேரவை ஆகிய ஆறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தொடர்ந்தனர். ஐந்தாம் நாளாக நேற்று போராட்டம் நடத்த, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 125 பெண்கள் உட்பட, 238 பேர் கைது செய்யப்பட்டு, ராம்நகரில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் நேரில் வந்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு செல்வம் கூறுகையில், ''மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி, 830 ரூபாயை மாநகராட்சி வழங்குகிறது. துாய்மை பணியாளர்களுக்கு நிர்ணயித்த, 770 ரூபாயை வழங்க மறுக்கிறது. துாய்மை பணியாளர்களுக்கும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும் அத்தொகையை வழங்கும் வரை, போராட்டம் தொடரும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us