Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பணிகள் வேகமெடுக்கும்! திருவள்ளுவர் திடலில் மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

பணிகள் வேகமெடுக்கும்! திருவள்ளுவர் திடலில் மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

பணிகள் வேகமெடுக்கும்! திருவள்ளுவர் திடலில் மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

பணிகள் வேகமெடுக்கும்! திருவள்ளுவர் திடலில் மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

ADDED : ஜூலை 10, 2024 10:23 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், 'ரவுண்டானா' அமைக்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு பின், மின்வாரியத்தால் மிகம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரவுண்டானா அமைக்கும் பணி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்காக, அப்பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிகக் கடைகளின் முகப்பு பகுதிகள், பெயர் பலகைகள், தற்காலிக கடைகள் அகற்றம் செய்யப்பட்டன.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம், ரவுண்டானா அமைக்கப்பட உள்ள இடம் அருகே டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் இருந்ததால், அவற்றை மாற்றியமைக்க, மின்வாரியத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது, மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பங்களை அகற்றி மாற்றியமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ரவுண்டானா அமைக்கும் பணி, துரிதப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3 கோடி ஒதுக்கீடு


நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:

பொள்ளாச்சி நகரில், வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருவள்ளுவர் திடல் பகுதியில் மார்க்கெட், மொத்த வியாபார கடைகள் உள்ளிட்ட பல வணிக கடைகள் பெருகி வரும் நிலையில், அங்கு நெரிசல் அதிகரிக்கிறது.

நான்கு ரோடுகள் சந்திக்கும் நிலையில், வாகனங்களை எளிதில் திருப்ப முடியாத நிலை ஏற்பட்டு, அடிக்கடி போக்குவரத்தும் ஸ்தம்பிக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது.

இதேபோல, அங்கு நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களுக்கு, மாற்று இடம் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்கெட் ரோட்டில், 'யூ டேர்ன்' அமைக்கப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கவனம் செலுத்தணும்!


பொள்ளாச்சி நகரில், ஏற்கனவே, பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை, அரசு மருத்துவனை, தேர்நிலையம், பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரவுண்டானா அமைக்கப்பட்டாலும், போக்குவரத்து விதிகள் குறித்து அறியாமல், வாகன ஓட்டுநர்கள் தாறுமாறாக வாகனங்களை இயக்குகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, அகலமான ரோட்டை ஆக்கிரமித்து, ஆட்டோ மற்றும் 'டாக்சி' நிறுத்தம் அமைக்கின்றனர். இதனால், திருவள்ளுவர் திடலில் ரவுண்டானா அமைத்தாலும், வாடகை வாகனங்களின் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.

இதற்கு, நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து துறை, போலீஸ், நகராட்சி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us