Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிசை இல்லாத பகுதியில் குடிசைகள் கணக்கெடுப்பு: கனவு இல்லம் திட்டத்தில் மாற்றம் வருமா?

குடிசை இல்லாத பகுதியில் குடிசைகள் கணக்கெடுப்பு: கனவு இல்லம் திட்டத்தில் மாற்றம் வருமா?

குடிசை இல்லாத பகுதியில் குடிசைகள் கணக்கெடுப்பு: கனவு இல்லம் திட்டத்தில் மாற்றம் வருமா?

குடிசை இல்லாத பகுதியில் குடிசைகள் கணக்கெடுப்பு: கனவு இல்லம் திட்டத்தில் மாற்றம் வருமா?

ADDED : ஜூன் 03, 2024 12:30 AM


Google News
கிணத்துக்கடவு:கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு, ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில், குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்கு மாற்றாக புதிய வீடு கட்ட, இத்திட்டத்தின் வாயிலாக, ஒரு வீட்டிற்கு, 3.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 34 ஊராட்சிகளிலும், குடிசைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கிணத்துக்கடவு ஒன்றியத்தை பொறுத்த வரை குடிசை வீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளின் மேற்கூரை அமைக்க ஆட்கள் கிடைக்காததால், அதற்கு மாற்றாக சிமென்ட் சீட் மற்றும் தகர சீட் போன்றவை அமைத்துள்ளனர்.

இத்திட்டத்தில், குடிசை வீடுகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுவதால், சிமென்ட் சீட் மற்றும் தகர சீட் அமைத்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதிப்படைவர்.

இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், குடிசை வீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. கனவு இல்லம் திட்டம் இப்பகுதி மக்களுக்கு பயன்படாமல் போகிறது.

தமிழக அரசு, கொங்கு மண்டலத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. மக்கள் தேவையை அறிந்து, இடத்துக்கு எற்ப திட்டங்கள் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தால் கொங்கு மண்டலத்துக்கு எந்த பயனும் இல்லை.

எனவே, குடிசை வீட்டிற்கு மட்டும் நிதி வழங்காமல், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் சிமென்ட் சீட் மற்றும் தகர சீட் அமைத்துள்ள வீடுகளையும் சேர்த்து, அரசு திட்டத்தில் வீடு கட்டி கொடுக்க நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

இதுகுறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக குடிசை வீடுகள் மாற்றப்படும். இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக சிமென்ட் சீட் மற்றும் தகர சீட் வீடுகளை கணக்கெடுத்து, புதிய வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us