/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போக்குவரத்துக்கு இல்லை தடை! கொஞ்சம் நல்லதும் செய்கிறது மாநகராட்சி போக்குவரத்துக்கு இல்லை தடை! கொஞ்சம் நல்லதும் செய்கிறது மாநகராட்சி
போக்குவரத்துக்கு இல்லை தடை! கொஞ்சம் நல்லதும் செய்கிறது மாநகராட்சி
போக்குவரத்துக்கு இல்லை தடை! கொஞ்சம் நல்லதும் செய்கிறது மாநகராட்சி
போக்குவரத்துக்கு இல்லை தடை! கொஞ்சம் நல்லதும் செய்கிறது மாநகராட்சி
ADDED : ஜூன் 22, 2024 12:33 AM

கோவை:கோவையில் 40 ஆண்டுகளுக்குப் பின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் கடைகளை அகற்றி, ரோடு அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் புரூக்பாண்ட் ரோடுக்கு இடையிலுள்ள காமராஜபுரம் பகுதியில், வி.வி.சி.லே அவுட் என்ற பழமையான குடியிருப்பு உள்ளது.
அங்கிருந்த ரோடுக்கான இடம், பல கட்டங்களாக விற்கப்பட்டு, கடைகளாக மாற்றப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, மனையிட உரிமையாளர் உட்பட பல தரப்பினரும், பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
ஐகோர்ட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த மார்ச் 28ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ரோடு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான தடையை நீக்கிய ஐகோர்ட், அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை அமைக்குமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. கடந்த ஒன்றாம் தேதியன்று, அங்கிருந்த ரோடு ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
அங்கு கட்டப்பட்டிருந்த கடைக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, இடிபாடுகள் மற்றும் தளவாடங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, ரோடு இடம் அளவிடப்பட்டது.
ஆனால் அந்த இடம் சமமாக இல்லாத காரணத்தால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. அந்த இடத்தில் ரோடு அமைக்க வேண்டுமென்று, காமராஜபுரம், வடகோவை பகுதி மக்கள் தரப்பில், மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. அதனை ஏற்று, பள்ளமாக இருந்த பகுதிகளில் கான்கிரீட் தளம் போட்டு, சமதளப்படுத்தும் பணி, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. விரைவில் இந்த இடத்தில், தார் ரோடு அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மொத்தம் 220 அடி நீளம், 40 அடி அகலமுள்ள இந்த ரோடு, புரூக்பாண்ட் ரோட்டில் ஒரு பக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றுவழியாக அமையும். இந்த ரோட்டில், வேறு விதமான ஆக்கிரமிப்புகள் வராமல் தடுக்க வேண்டியதும், மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பாகும்.