Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சியில் சிரிஞ்ச் சாக்லேட் விற்பனை அமோகம்; குழந்தைகளுக்கு ஆபத்தாகும் முன் தடுப்பது அவசியம்

பொள்ளாச்சியில் சிரிஞ்ச் சாக்லேட் விற்பனை அமோகம்; குழந்தைகளுக்கு ஆபத்தாகும் முன் தடுப்பது அவசியம்

பொள்ளாச்சியில் சிரிஞ்ச் சாக்லேட் விற்பனை அமோகம்; குழந்தைகளுக்கு ஆபத்தாகும் முன் தடுப்பது அவசியம்

பொள்ளாச்சியில் சிரிஞ்ச் சாக்லேட் விற்பனை அமோகம்; குழந்தைகளுக்கு ஆபத்தாகும் முன் தடுப்பது அவசியம்

ADDED : ஜூன் 16, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் குழந்தைகளை கவரும் வகையில், 'சிரிஞ்ச் சாக்லேட்டு'கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, அந்த பகுதியில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், கடந்த சில நாட்களாக, 'சிரிஞ்ச் சாக்லெட்' விற்பனை செய்யப்படுகிறது. ஊசி போட பயன்படுத்தப்படும் சிரிஞ்ச் குழாயில், திரவ நிலையில் இருக்கும் சாக்லேட் பாதி அளவுக்கு நிரப்பி விற்பனை செய்யப்படுகிறது.

ஐந்து ரூபாய்க்கு, குழந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் இதன் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

எந்த விபரமும் இல்லை


பொள்ளாச்சி பகுதியில் பரவலாக விற்கப்படும் சாக்லேட், எங்கு தயாரிக்கப்படுகிறது, தயாரித்த நிறுவனம் பெயர் என்ன, எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் உள்ளிட்ட எந்த விபரங்களும் அதில் குறிப்பிடவில்லை.

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதா, பயன்படுத்தி வீசப்பட்ட சிரிஞ்சியில் அடைக்கப்பட்டு தரமின்றி விற்கப் படுகிறதா என, தெரியாமல் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

குறைந்த விலைக்கு விற்கப்படும் இவை, தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எந்த நிறுவனம் தயாரிக்கிறது என்ற விபரங்கள் இல்லாமல் இவை விற்பனை செய்வதை அதிகாரிகள் ஏன் தடுக்காமல் உள்ளனர் என்பது தெரியவில்லை.

விற்பனை செய்யும் கடைகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், இது எங்கு இருந்து வருகிறது; யார் விற்பனை செய்கின்றனர்; எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கள ஆய்வு செய்யப்படும்

உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''சிரிஞ்ச் வடிவிலான சாக்லேட் விற்பனை குறித்து கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போல விற்பனை செய்யக்கூடாது,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us