Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆசிரியர்களை திணறடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கு தகவல் மறைப்பு

ஆசிரியர்களை திணறடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கு தகவல் மறைப்பு

ஆசிரியர்களை திணறடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கு தகவல் மறைப்பு

ஆசிரியர்களை திணறடிக்கும் மாணவர்கள் பெற்றோருக்கு தகவல் மறைப்பு

ADDED : ஜூலை 03, 2024 02:49 AM


Google News
பொள்ளாச்சி;பெற்றோர்களின் எண்ணுக்கு மாற்றாக, தங்களது மொபைல்போன் எண்களையே மாணவர்கள் அளிப்பதால், பள்ளி விபரங்களை தெரிவிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் வாயிலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியரின் தனித்திறன், சுய ஒழுக்கம் என, மாணவர்களின் குறிப்பிட்ட சில விபரங்களை பெற்றோர்களிடம் தெரிவிக்கும் வகையில், வகுப்பு ஆசிரியரும், தலைமையாசிரியரும், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளடக்கிய 'வாட்ஸ்ஆப்' குழுவை உருவாக்கியுள்ளனர்.

அவ்வகையில், தினமும், மாணவர்களுக்கு, 'வாட்ஸ்ஆப்' வாயிலாக 'ேஹாம் ஒர்க்' குறித்த விபரம், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிடப்படுகிறது.

இதன் வாயிலாக, பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரையும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முறையாக கவனிக்கின்றனர். ஆனால், சில மாணவர்கள், பெற்றோர்களின் எண்ணுக்கு மாற்றாக, தங்களது மொபைல்போன் எண்களையே 'வாட்ஸ்ஆப்' குழுக்கு அளிப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், மாணவர்களின் கற்றல் திறனை வேகப்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

சில பள்ளிகளில், ஒவ்வொரு வாரமும் கற்கும் திறனில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து, அறிந்து கொள்ளும் வகையில், பயிற்சி ஏடுகள் வாயிலாக தேர்வு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, மாணவர்களின் கற்பித்தல் வளர்ச்சி, கண்காணிக்கப்படுகிறது.

இதில், முன்னேற்றம் இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வர். ஆனால், ஆசிரியர்கள் அளிக்கும் தகவல் பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்கவே, மாணவர்கள் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்களின் மொபைல்போன் எண் கோட்டால், அம்மாணவர்கள், அவரவரின் மொபைல்போன் எண்ணை அளித்து ஏமாற்றுகின்றனர். கிராமங்களில் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் சிலர், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை.

இதையும், மாணவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய மாணவர்களின் செயலுக்கு கடிவாளம் போடவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us