Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் அத்துமீறல்: விளம்பரம் எழுதுவதை தடுக்காத அதிகாரிகள்

அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் அத்துமீறல்: விளம்பரம் எழுதுவதை தடுக்காத அதிகாரிகள்

அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் அத்துமீறல்: விளம்பரம் எழுதுவதை தடுக்காத அதிகாரிகள்

அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் அத்துமீறல்: விளம்பரம் எழுதுவதை தடுக்காத அதிகாரிகள்

ADDED : ஜூலை 05, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனத்தார், அரசு சுவர்களில் விளம்பரம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், சுற்றுச்சுவர்கள், பாலங்களில் எந்தவிதமான விளம்பரங்களும் எழுதவும், போஸ்டர் ஒட்டவும் கூடாது என விதிமுறை உள்ளது. இதற்காக, அரசு துறை அலுவலக சுற்றுச்சுவர்களில், உரிய துறை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள், திட்ட செயல்பாடுகள் என எழுதும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று, பொள்ளாச்சி நகராட்சி பகுதியிலுள்ள அரசு சுவர்களில், அரசியல் கட்சிகள், தனியார் விளம்பரம் எழுதக்கூடாது. தடையை மீறி விளம்பரம் எழுதுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், பொள்ளாச்சி நகரில், எதையும் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனத்தார் பலரும், இஷ்டம் போல் போஸ்டர் ஒட்டுவதையும், விளம்பரம் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலம், நடை மேம்பாலம், போக்குவரத்து ரவுண்டானா, சென்டர்மீடியன் ஆகியவற்றில், அரசியல் கட்சியினர் தங்கள் நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்கள் பிறந்த நாள், தலைவர்கள் வருகை என கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதில் போட்டா போட்டி நடத்துகின்றனர். கட்சி நிகழ்ச்சிகளுக்கு அரசு சுவர்களில் விளம்பரம் எழுதப்படுகிறது.

பாலக்காடு ரோடு, கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் தி.மு.க.,வினர் விளம்பரம் எழுதிய போது, 'தினமலர்' நாளிதழிலில் விதிமுறைகளையும், நகராட்சி தீர்மானத்தையும் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடப்பட்டது. அதனால், அரசு சுவரில் விளம்பரம் எழுதுவதை கைவிட்டனர்.

தற்போது, தி.மு.க., கூட்டணியில் உள்ள கொ.ம.தே.க.,வினர் விளம்பரம் எழுதுகின்றனர். இதை அதிகாரிகள் தடுக்காவிட்டால், இதையே முன்னுதாரணமாக கொண்டு, மேம்பால சுவர்களில் விளம்பரம் எழுதி அலங்கோலப்படுத்தி விடுவர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

பாலக்காடு மற்றும் கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலம், உள்ளிட்ட பல பகுதிகளில் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல், வாகனங்களில் செல்வோரின் கவனம் சிதறி விபத்துக்கு வழிவகுக்கும்.

சுவர் விளம்பரம், பிளக்ஸ்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தும், கட்சியினர் எழுத்து பூர்வமாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்த நிலையில், கட்சி தொண்டர்கள் அத்துமீறி விளம்பரம் எழுதுகின்றனர். இதனால், மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us