/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்வாய் கரையில் மாயமான பாதைகள் பி.ஏ.பி., விவசாயிகள் அதிருப்தி கால்வாய் கரையில் மாயமான பாதைகள் பி.ஏ.பி., விவசாயிகள் அதிருப்தி
கால்வாய் கரையில் மாயமான பாதைகள் பி.ஏ.பி., விவசாயிகள் அதிருப்தி
கால்வாய் கரையில் மாயமான பாதைகள் பி.ஏ.பி., விவசாயிகள் அதிருப்தி
கால்வாய் கரையில் மாயமான பாதைகள் பி.ஏ.பி., விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 13, 2024 08:35 AM
உடுமலை : பாசன கால்வாய் கண்காணிப்புக்காக முன்பு அமைக்கப்பட்ட பாதைகள் பராமரிப்பின்றி, முற்றிலுமாக காணாமல் போயும், பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
உடுமலை தாலுகாவில், பிரதான பாசன திட்டமாக பி.ஏ.பி., உள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமான, பி.ஏ.பி., கால்வாய்கள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் உள்ளன.
நான்கு மண்டல பாசன காலங்களில், நீர் திருட்டை தடுக்கவும், கண்காணிப்புக்கும், கால்வாய் கரையில், வாகனங்கள் செல்லும் வகையில், பொதுப்பணித்துறையின் பாதை அமைக்கப்பட்டிருந்தது.
பிற அத்துமீறல்களை தடுக்க, இந்த பாதையின் குறுக்கே, சங்கிலி தடுப்புகளும் அமைக்கப்பட்டு, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பிட்ட இடைவெளியில், மண் கொட்டியும், ஜல்லிக்கற்களால், கப்பி சாலையும் அமைக்கப்பட்டது. இவ்வாறு, கால்வாய் கரை பாதை பராமரிப்புக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த பாதையை விவசாயிகளும் முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெரும்பாலான கிளை கால்வாய் கரைகளில், பாதை இருந்த சுவடே இல்லாமல் மறைந்துள்ளது.
ஆக்கிரமிப்பு மற்றும் முறையாக பராமரிக்காமல், புதர் மண்டியது உள்ளிட்ட காரணங்களால், இப்பாதைகள் மறைந்து விட்டன. மேலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
பாசன காலத்தில், நீர் திருட்டை தடுக்க, அவ்வழியாக பொதுப்பணித்துறை வாகனங்கள் செல்ல முடியாமல், குறிப்பிட்ட தொலைவுடன் திரும்பும் நிலை உள்ளது.
உடுமலை, பூலாங்கிணறு, புதுப்பாளையம் உள்ளிட்ட கிளை கால்வாய்களில், மண்டல பாசனம் துவங்கும் முன், கரையிலுள்ள புதர்கள் அகற்றப்பட்டாலும், பாதை பராமரிப்பை கண்டுகொள்வதில்லை. இவ்வாறு, படிப்படியாக பாதைகள் மாயமாகி வருவதால், நீர்நிர்வாகத்தில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
கண்காணிப்புக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால், நீர் திருட்டு எளிதாக நடக்கிறது.
கால்வாய் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதையை மேம்படுத்த வேண்டும் என பாசன விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.