/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஜெய் ஜெகன்நாத்!' கோஷம் முழங்க நடந்தது 'இஸ்கான்' தேரோட்டம்! 'ஜெய் ஜெகன்நாத்!' கோஷம் முழங்க நடந்தது 'இஸ்கான்' தேரோட்டம்!
'ஜெய் ஜெகன்நாத்!' கோஷம் முழங்க நடந்தது 'இஸ்கான்' தேரோட்டம்!
'ஜெய் ஜெகன்நாத்!' கோஷம் முழங்க நடந்தது 'இஸ்கான்' தேரோட்டம்!
'ஜெய் ஜெகன்நாத்!' கோஷம் முழங்க நடந்தது 'இஸ்கான்' தேரோட்டம்!
ADDED : ஜூலை 14, 2024 01:11 AM

கோவை:அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான, 'இஸ்கான்' சார்பில், கோவையில் நேற்று தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒடிசா மாநிலம், புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி, கோவையில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான 'இஸ்கான்' சார்பில், தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
நேற்று, கோவை தேர்முட்டியில் நடந்த தேரோட்ட துவக்க விழாவில், இஸ்கான் மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மகராஜ், எம்.பி., ராஜ்குமார், கோவை துணை மேயர் வெற்றிச் செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.,கார்த்திக் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
'ஹரே கிருஷ்ண ஹரே ராம்' முழக்கத்தை பக்தர்கள் பரவசத்துடன் முழங்க, தேர்முட்டியில், ரத யாத்திரை துவங்கியது. தேரில், ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தேர், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுடர்வீதி, வைசியாள் வீதி வழியாக வலம் வந்து, மீண்டும் தேர்முட்டியை மாலை 6:00 மணிக்கு வந்தடைந்தது.
தேரில் மூல விக்ரகங்களே எழுந்தருள்வது, ஜெகன்நாதர் தேர்த்திருவிழாவில் மட்டும்தான் என்பது சிறப்பம்சமாகும்.
தேரோட்டத்தின்போது, பக்தர்கள் 'ஜெய் ஜெகன்நாத்', 'ஹரே கிருஷ்ணா' கோஷத்தை முழங்கியதுடன், ஆடல், பாடல், கும்மியாட்டங்கள், பஜனைகளில் ஈடுபட்டனர். தேர் ஒவ்வொரு பகுதியாகக் கடக்கும்போதும், பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
தேரோட்டம் நிறைவு பெற்றதும், மூல விக்ரகங்கள், மீண்டும் ஜெகன் நாதர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பக்தி வினோத சுவாமி மகராஜ் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தேர்த்திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.