Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையோரம் செயல்படும் சந்தை வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

சாலையோரம் செயல்படும் சந்தை வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

சாலையோரம் செயல்படும் சந்தை வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

சாலையோரம் செயல்படும் சந்தை வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

ADDED : ஜூலை 03, 2024 02:45 AM


Google News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், நெடுஞ்சாலையோரத்தில் செயல்படும், வாரச்சந்தையால்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், எஞ்சிய கழிவுகளால் துர்நாற்றம்வீசுகிறது.

பொள்ளாச்சியில் இருந்து முக்கிய வழித்தடத்தில், ஒவ்வொரு கிழமைகளிலும், ரோட்டோர வாரச்சந்தை அமைக்கப்படுகிறது.

குறிப்பாக, ஊஞ்சவேலாம்பட்டி, வஞ்சியாபுரம்பிரிவு, ஐஸ்வர்யாநகர் என, பல இடங்களில் நெடுஞ்சாலையை ஒட்டிய வாரச்சந்தை கூடுகிறது.

சந்தையில், அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகளால் எடுத்து வரப்படும் காய்கறிகளை வாங்கி, சில்லரை வியாபாரம் செய்கின்றனர். வாரச்சந்தை என்ற பெயரில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே, கடைகள் அமைக்கப்படுகிறது.

இதற்காக, தனியாக அரசியல் கட்சி சார்ந்து புரோக்கர்களும் செயல்பட்டு வருகின்றனர். காய்கறிகள் வாங்க வருவோர், தங்களது வாகனங்களை, ரோட்டோரம் தாறுமாறாக நிறுத்திச்செல்கின்றனர். இதனால், வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

வாரச்சந்தையின்போது, ரோட்டோரம் நிற்கும் மக்கள், சாலையில் கடக்கும் வாகனங்களை கண்டு கொள்வதும் கிடையாது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள், திடீரென சாலையை கடக்க முற்படுவதால், விபத்தும் ஏற்படுகிறது.

இதுதவிர, வாரச்சந்தை முடிந்து, எஞ்சிய கழிவுகள் மற்றும் பாலித்தீன் பைகள் அங்கேயே விட்டுச் செல்கின்றனர்.

குப்பைக்கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு, முறையாக அனுமதி பெறுவதும்கிடையாது.

ஒரு சிலர் லாப நோக்கத்துடன், தனியார் மற்றும் அரசு நிலத்தை கண்டறிந்து, கடைகளை அமைத்து, வியாபாரிகளிடம் ஒரு கடைக்கு, 200 முதல் 300 ரூபாய் வரை வசூலும் செய்கின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us