ADDED : ஜூன் 21, 2024 11:42 PM
அன்னுார்:கடந்த ஏழு மாதமாக ஊராட்சிகள் வசூலிக்கும், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரி இனங்களையும் நேரடியாக ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரின் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு நிதி விடுவிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்த வங்கிக் கணக்கில் நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால் ஊராட்சிகளில் குடிநீர் குழாய் பராமரிப்பு, கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முடங்கின. இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு புகார் தெரிவித்தது.
இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் (20ம் தேதி) பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நேற்று ஊராட்சிகளுக்கு வங்கி கணக்கில் இருந்து நிதி விடுவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி தலைவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.