Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தெருநாய் குட்டி போட்டிருந்தால் உடனே பிரிக்காதீங்க!'

'தெருநாய் குட்டி போட்டிருந்தால் உடனே பிரிக்காதீங்க!'

'தெருநாய் குட்டி போட்டிருந்தால் உடனே பிரிக்காதீங்க!'

'தெருநாய் குட்டி போட்டிருந்தால் உடனே பிரிக்காதீங்க!'

ADDED : ஜூன் 25, 2024 02:20 AM


Google News
கோவை:டாடாபாத், நேரு நகரில் குட்டி ஈன்ற தெருநாய், 4க்கும் மேற்பட்டோரை கடித்ததை அடுத்து, குட்டிகளுடன் மீட்கப்பட்ட நாய், விலங்குகள் காப்பகத்தில் விடப்பட்டது.

மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட டாடாபாத், சாஸ்திரி ரோடு பகுதியில், சமீபத்தில் குட்டி ஈன்ற தெரு நாய், மக்களைக் கடிப்பதாக புகார் எழுந்தது. காவல் துறை வரை புகார் சென்றது.

சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஹியூமன் அனிமல் சொசைட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன், சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் பேசி, இளம் தாயாக உள்ள நாயைத் தொந்தரவு செய்ததால்தான், அது கடிக்கத் தொடங்கியிருக்கிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அஸ்ரா தொண்டு நிறுவனம் வாயிலாக, 4 குட்டிகளும், தாய் நாயும் மீட்கப்பட்டு, உக்கடத்தில் உள்ள விலங்குகள் கருத்தடை அறுவைச் சிகிச்சை மையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

விலங்குகள் நல ஆர்வலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “இதுவரை அந்த தெரு நாய் யாரையும் கடித்ததில்லை. குட்டி ஈன்ற 4, 5 நாட்களுக்குள் அதன் சில குட்டிகளை யாரோ எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், அந்த தாய் நாய் தன் குட்டிகளைப் பாதுகாப்பதற்காக, அவ்வழியாகச் செல்வோரைக் கடிக்கத் துவங்கியுள்ளது.

பொதுவாக நாய்க் குட்டிகளை, 45 நாட்கள் வரை பிரித்து எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், தாய் நாய் ஆவேசமடைந்து, கடிக்கத் தொடங்கிவிடும். பொதுமக்கள் தெரு நாய் குட்டி போட்டிருந்தால், உடனே பிரித்துவிடக்கூடாது. அதனால் தேவையற்ற விபரீதம் நிகழக்கூடும்,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us