Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரண்டாண்டுகளில் 5 புதிய ரயில்கள் கோவை தொழில் துறையினர் மகிழ்ச்சி பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு

இரண்டாண்டுகளில் 5 புதிய ரயில்கள் கோவை தொழில் துறையினர் மகிழ்ச்சி பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு

இரண்டாண்டுகளில் 5 புதிய ரயில்கள் கோவை தொழில் துறையினர் மகிழ்ச்சி பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு

இரண்டாண்டுகளில் 5 புதிய ரயில்கள் கோவை தொழில் துறையினர் மகிழ்ச்சி பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 18, 2024 08:44 PM


Google News
கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் தொடர் முயற்சியால், இரண்டு ஆண்டுகளில், ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களில், சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரும் சந்திப்பாக கோவை உள்ளது. இருப்பினும், கோவையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, ரயில்கள் குறைவாக இருப்பதால், பஸ்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் தொடர்கிறது.

அதேபோல, தென் மாவட்டங்களுக்கான பழைய ரயில்கள் இன்னும் இயக்கப்படாததால், இங்குள்ள பல லட்சம் மக்கள், தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு பஸ்களையே நம்பியுள்ளனர்.

இதனால் ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு, புதிய ரயில்கள் இயக்கம் ஆகிய கோரிக்கைகளை, இங்குள்ள தொழில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் ரயில் பயணியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியம் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளை சந்தித்து, மீண்டும் மீண்டும் மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

இதற்கு படிப்படியாக பலனும் கிடைத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளில், ஐந்து புதிய ரயில் சேவைகள் இதனால் துவக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஏப்., 23ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பழனி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு வாராந்திர ரயில் சேவை துவங்கியது.

அதே ஆண்டு செப்., 1ல் இருந்து மதுரை - கோவை - மதுரை தினசரி ரயில் சேவையும் துவக்கப்பட்டது. அதேபோல, 2023 ஏப்., 8ல், கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

தொடர்ச்சியாக, கடந்த டிச., 31ல் இருந்து, கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையும் துவங்கி, அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரிசையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை - பழனி - மதுரை - விருதுநகர் வழியாக துாத்துக்குடிக்கு வாரம் இருமுறை ரயில் சேவை ஜூலை 19ல் துவங்கவுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்துமே வரவேற்பை பெற்றிருப்பதுடன், நல்ல வருவாயும் அளித்து வருவதால், கூடுதல் ரயில்களை கோவையிலிருந்து இயக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை எழும்பூருக்கும், பெங்களூருக்கும் இரவு நேர ரயில்களையும், கோவை - ராமேஸ்வரம் இடையே தினசரி ரயிலையும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

-நமது நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us