/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரசியல்வாதிகள் மீதான வழக்கில் மட்டும் ஏன் தாமதம்: ஐகோர்ட்அரசியல்வாதிகள் மீதான வழக்கில் மட்டும் ஏன் தாமதம்: ஐகோர்ட்
அரசியல்வாதிகள் மீதான வழக்கில் மட்டும் ஏன் தாமதம்: ஐகோர்ட்
அரசியல்வாதிகள் மீதான வழக்கில் மட்டும் ஏன் தாமதம்: ஐகோர்ட்
அரசியல்வாதிகள் மீதான வழக்கில் மட்டும் ஏன் தாமதம்: ஐகோர்ட்
ADDED : செப் 02, 2025 09:41 AM
சென்னை: 'முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காவல் துறைக்கு, உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், 'அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் மட்டும் விசாரணை ஏன் தாமதமாகிறது' என, கேள்வி எழுப்பியது.
அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ள, உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, 'டெண்டர்' வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வேலுமணி மனு தாக்கல் செய்தார்.
வேலுமணிக்கு எதிரான வழக்கை மட்டும், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின் ஆட்சி மாறியது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் உள்நோக்குடன் புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய கோரி, இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. அதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 'ஆறு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது.இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 'அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும், ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில், காவல் துறை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையை, வரும் 19க்கு தள்ளி வைத்தார்.