Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூன்றுவித வவ்வால் மீன்கள் காசிமேடில் களைகட்டியது விற்பனை

மூன்றுவித வவ்வால் மீன்கள் காசிமேடில் களைகட்டியது விற்பனை

மூன்றுவித வவ்வால் மீன்கள் காசிமேடில் களைகட்டியது விற்பனை

மூன்றுவித வவ்வால் மீன்கள் காசிமேடில் களைகட்டியது விற்பனை

ADDED : செப் 14, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
காசிமேடு:காசிமேடில், வழக்கத்திற்கு மாறாக கறுப்பு வவ்வால், வெள்ளை வவ்வால் மற்றும் ஐ வவ்வால் வகை மீன்கள், அதிகளவில் விற்பனைக்கு வந்தன. அவற்றை போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றதால், விற்பனை களைகட்டியது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 20க்கும் குறைவான விசை படகுகளே கரை திரும்பின. மீன் வரத்து குறைவால் விலை கடுமையாக உயர்ந்தது.

இதனால், மீன் வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. மீன்கள் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக கறுப்பு, வெள்ளை வவ்வால் மற்றும் ஐ வவ்வால் வகை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. மேலும், சிறியரக மீன்களான கானாங்கத்தை, வாலை, சங்கரா, நெத்திலி உள்ளிட்ட மீன்களும், அதிகளவில் விற்பனைக்கு வந்தன. அதேநேரம் அதிகாலை பெய்த மழையால், வியாபாரிகள் மற்றும் மக்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன்களின் விலை சரிவை கண்டது.

வியாபாரிகளுடன் போட்டியிட்டு பொதுமக்களும் மீன்களை வாங்கி சென்றனர். மீன்கள் வரத்து அதிகம் இருந்ததும், போதிய விலை கிடைக்காததால், விசைப்படகு உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விசைப்படகு உரிமையாளர்கள் கூறுகையில், 'ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், காசிமேட்டிற்கு மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.

'இதனால், காசிமேடு மீனவர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. வெளிமாநில மீன்கள் விற்பனையை தடுக்க, மீன்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us