ADDED : பிப் 02, 2024 07:24 AM
பெரம்பூர்,: பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் மாநகராட்சியின் விளையாட்டு மைதானம் இருந்தது. இதன் எதிரே திரு.வி.க.நகர் மண்டல வார்டு குழு தலைவரின் அலுவலகமும் உள்ளது. இப்பகுதியில் உள்ள தான்தோன்றி அம்மன் ஆலய தீ மிதி விழா ஆண்டுதோறும் இந்த மைதானத்தில் நடைபெறும். இதற்காக தயார்படுத்தப்படும் மைதானம், பின் சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மைதானம் தீ மிதி விழாவை அடுத்து, தனியார் சிலரது வாகன பார்க்கிங் இடமாகவே மாறிவிட்டது.
மைதானத்தில் இரண்டு புறமும் நுழைவாயில் வசதி இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாகிவிட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த மைதானம் பல ஆண்டுகளாகவே பயன்பாடின்றியே உள்ளது. இதன் அருகே மாநகராட்சி நடைபாதை பூங்காவும் உள்ளது. அதுவும் உரிய பராமரிப்பின்றி உள்ளது. ஜி.கே.எம். காலனியில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானமும் பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அனுமதியின்றி வாகனத்தை நிறுத்த யாருக்கும் தைரியம் வராது. மைதானத்தை உரிய பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


