Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வினோத பிரச்னையில் தவிக்கும் மணலிபுதுநகர்; நாணல் பஞ்சு படிவதால் சுவாச கோளாறு பாதிப்பு

வினோத பிரச்னையில் தவிக்கும் மணலிபுதுநகர்; நாணல் பஞ்சு படிவதால் சுவாச கோளாறு பாதிப்பு

வினோத பிரச்னையில் தவிக்கும் மணலிபுதுநகர்; நாணல் பஞ்சு படிவதால் சுவாச கோளாறு பாதிப்பு

வினோத பிரச்னையில் தவிக்கும் மணலிபுதுநகர்; நாணல் பஞ்சு படிவதால் சுவாச கோளாறு பாதிப்பு

ADDED : ஜூன் 03, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
மணலிபுதுநகர் : மணலி மண்டலம், 16வது வார்டு, மணலிபுதுநகர் - துவாரகா நகரில் குடியிருப்பு - 1 உள்ளது. இங்கு, 50 ஏக்கர் பரப்பளவில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 5,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக உள்ளது.

இங்குள்ள வீடுகளை ஒட்டி, ஏராளமான காலி மனைகள் உள்ளன. இவற்றில் தேங்கும் தண்ணீரில், பொன்னாங்கண்ணி கீரை, நாணல் புல் வகை செடிகள் அதிகளவில் வளர்ந்து, முட்புதர் போல் காட்சியளிக்கின்றன.

காலிமனைகளில், 6 - 7 அடி உயரத்திற்கு வளர்ந்துஇருக்கும் நாணலின் இடையே உள்ள பஞ்சுகள் உதிர்ந்து, காற்றில் பறக்கின்றன.

வீடுகளின் தண்ணீர் தொட்டி, குடங்கள், உணவு, துணிகளில் படிந்து, அப்பகுதிவாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

பஞ்சு படியும் உணவுகளை உட்கொள்வதால், ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மாடியில் துணி காய வைக்கும் துணியில் ஒட்டிக் கொள்ளும் பஞ்சை அகற்றுவதற்கும் பெரும் அவதி ஏற்படுகிறது. தவிர, விளையாடும் சிறுவர்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் மூக்கு, கண்களில் நுழைவதால், கண் எரிச்சல், தும்மல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

சென்னையில் புதிதாக ஏற்பட்டுள்ள இந்த வினோத பிரச்னைக்கு, என்ன தீர்வு காண்பது என தெரியாமல், மாநகராட்சி அதிகாரிகள் திகைத்து போயுள்ளனர்.

ஆராயப்படுகிறது

காலிமனைகள் அனைத்தும் பட்டா இடங்கள். இதில், மாநகராட்சி எந்தளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என ஆராய்ந்து வருகிறோம். முதற்கட்டமாக, காலி மனையின் உரிமையாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. முடிந்ததும், காலி மனைகளை சுத்தம் செய்ய, உரிமையாளர்கள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

- மாநகராட்சி அதிகாரிகள்

தீர்வு தேவை

மாடியில் காய வைக்கும் ஆடை முழுதும், நாணல் பஞ்சு படிவதால், மீண்டும் துவைக்க வேண்டியதாகிறது. உணவு, தண்ணீர் என அனைத்திலும் படிவதால், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகிறது. ஓராண்டாக இப்பிரச்னையை எதிர்கொள்கிறோம். இதற்கு, அரசு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

- சி.லோகேஸ்வரி, 48,

இல்லத்தரசி, துவாரகா நகர், மணலிபுதுநகர்

பெரும் பாதிப்பு

கொரோனாவிற்காக, முகக்கவசம் அணிய வேண்டும் என்கின்றனர். கடந்த ஓராண்டாவே, முகக்கவசம், துண்டு கட்டிக்கொண்டு தான், இங்கு வசிக்கிறோம். தொழிற்சாலை மாசு, தண்ணீர் பற்றாக்குறை, மின்தடை என வழக்கமான பிரச்னைகளு க்கு இடையே, வினோதமான இந்த பிரச்னையால், பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளோம்.

- ஆர்.கலைவாணி, 35,

இல்லத்தரசி, துவாரகா நகர், மணலிபுதுநகர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us