Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முடிச்சூர் - மணிமங்கலம் சந்திப்பில் பாலம் கனரக வாகனம் அதிகரிப்பால் எதிர்பார்ப்பு

 முடிச்சூர் - மணிமங்கலம் சந்திப்பில் பாலம் கனரக வாகனம் அதிகரிப்பால் எதிர்பார்ப்பு

 முடிச்சூர் - மணிமங்கலம் சந்திப்பில் பாலம் கனரக வாகனம் அதிகரிப்பால் எதிர்பார்ப்பு

 முடிச்சூர் - மணிமங்கலம் சந்திப்பில் பாலம் கனரக வாகனம் அதிகரிப்பால் எதிர்பார்ப்பு

ADDED : டிச 01, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
முடிச்சூர்: முடிச்சூர் - மணிமங்கலம் சாலை வழியாக, தொழிற்சாலைகளின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிகளவில் செல்வதால், அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியமாகி உள்ளது.

தினமும் ஏற்படும் நெரிசலை தடுக்க, மேம்பாலம் கட்டினால் வசதியாக இருக்கும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரானது, தாம்பரம் - முடிச்சூர் சாலை. இது, தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர், மண்ணிவாக்கம் வழியாக, ஜி.எஸ்.டி., மற்றும் வண்டலுார் - வாலாஜாபாத் சாலைகளை இணைக்கிறது. இதனால் இச்சாலையில், அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார், வேன் என, 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படுகிறது.

கடும் நெரிசல் இச்சாலையில், முடிச்சூரில் இருந்து பிரிந்து செல்கிறது மணிமங்கலம் சாலை. இது, சேத்துப்பட்டு, மலைப்பட்டு வழியாக ஸ்ரீபெரும்புதுாரை இணைக்கிறது.

இச்சந்திப்பை தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துவதால், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருதி, இந்த சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில், முடிச்சூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில்கூட, இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, முடிச்சூர் - மணிமங்கலம் சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முடிச்சூர் ஊராட்சி மக்கள் கூறியதாவது:

முடிச்சூர் - மணிமங்கலம் சந்திப்பில், இடது புறத்தில் அரசு நிலம் உள்ளது. தற்போது அந்நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை கையகப்படுத்தினால், மேம்பாலம், அதன் கீழே ரவுண்டானா அமைக்கவும் வசதியாக இருக்கும். இதற்கென தனியார் நிலங்களை கையகப் படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இக்கோரிக்கையை நெடுஞ்சாலைத் துறை பரிசீலித்து, இந்த சந்திப்பில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகரிப்பு வாகன ஓட்டிகள் கூறியதாவது:

முடிச்சூர் - மணிமங்கலம் சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள 'சிப்காட்' தொழிற்சாலைகளின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் அதிகம் செல்கின்றன.

மணிமங்கலம் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், இச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

இதன் காரணமாக, இந்த சந்திப்பில் நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த நேரத்தில், மேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us