ADDED : மே 29, 2025 12:31 AM
பூந்தமல்லி பூந்தமல்லி தாலுகாவில், கடந்த 20ம் தேதி, ஜமாபந்தி துவங்கி, ஆறு நாட்கள் நடந்தது. இதில், பூந்தமல்லி, திருவேற்காடு, திருமழிசை, நேமம், வயலாநல்லுார், வானகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, முதியோர் - விதவை - மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, ஆதரவற்றோர் விதவை சான்று, இலவச வீட்டு மனை பட்டா, சான்றிதழ்களில் பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
இதில், 90 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இறுதி நாளான நேற்று, உடனடி தீர்வு காணப்பட்ட, 90 மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.