Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு

திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு

திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு

திருவொற்றியூரில் திருவள்ளுவருக்கு கோவில் நலச்சங்கம், பாரதி பாசறை வரவேற்பு

ADDED : ஜூலை 03, 2024 12:23 AM


Google News
திருவொற்றியூர், திருவொற்றியூர், தேரடி, ஈசாணி மூர்த்தி கோவில் தெரு சந்திப்பில் திருவள்ளுவர் மற்றும் வாசுகி ஆகியோருக்கு தனிக்கோவில் இருந்துள்ளது.

பழமையான இக்கோவில், 20 ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. பின், சாலை விரிவாக்கத்தின் போது, முழுதுமாக கோவில் அகற்றப்பட்டு விட்டது.

வரலாற்று தொடர்புடைய கோவில் என்பதால், திருவள்ளுவருக்கான திருக்கோவிலை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என, திருவொற்றியூர் நலச்சங்கத்தினர், எம்.எல்.ஏ., -- எம்.பி., ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு, கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.

அதே போல், திருவொற்றியூர் பாரதி பாசறை அமைப்பினரும், தங்களது ஆண்டு குழுவில், தீர்மானங்கள் நிறைவேற்றி, திருவள்ளுவருக்கான கோவில் அமைக்க வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை, 2024 - 25ல், திருக்கோவில் மீட்டுருவாக்குதல் என்ற தலைப்பில், 81வது அறிவிப்பாக, சென்னை, திருவொற்றியூர், அருள்மிகு திருவள்ளுவர் கோவில், 90 லட்சம் மதிப்பீட்டில், கட்டப்படும் என, அறிவிப்பு வெளியானது.

இதற்கு, திருவொற்றியூர் நல சங்கம், பாரதி பாசறை மற்றும் திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மகிழ்ச்சி

திருவள்ளுவர் கோவிலை கட்ட வேண்டும் என, திருவொற்றியூர் நலச்சங்கம் சார்பில், பல முயற்சிகள் மேற்கொண்டோம். அதன்படி, எம்.பி., - எம்.எல்.ஏ.,, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் திருவொற்றியூர் மண்டல குழு தலைவருக்கும், கோரிக்கை மனுவை, ஓராண்டிற்கு முன்னதாக வழங்கினோம். இந்நிலையில், மானிய கோரிக்கை அறிவிப்பில், 90 லட்சம் ரூபாய் செலவில், திருவள்ளுவருக்கு கோவில் அமைய உள்ளதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணி, திருவொற்றியூர் நலச்சங்கம்.

வரலாற்று தொடர்புடைய கோவில்

இது குறித்து, திருவொற்றியூர் பாரதி பாசறை செயலர் மா.கி.ரமணன் கூறியதாவது: திருவள்ளுவரின் சீடரான, ஏலேலோ சிங்கர் எனும் ஈழ வணிகர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமியின் தீவிர பக்தர் ஆவார். அவர், தியாகராஜருக்கு கொடுப்பதற்காக மாணிக்கம் வைத்திருந்தார்.இறைவன் கனவில் தோன்றி, அதை காசி ஏழைக்கு வழங்கும்படி கூறியதை தொடர்ந்து கொடுத்து விட்டார். பின், உள்நாட்டு அரசர், ஏலேலோ சிங்கரிடம், மாணிக்கம் இருப்பதை அறிந்து, அவரிடம் மாணிக்கம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.இது குறித்து, ஏலேலோ சிங்கர் இறைவனிடம் முறையிடவே, தியாகராஜரே மாணிக்கம் ஒன்றை தந்தார். இதனால், இறைவனுக்கு மாணிக்க தியாகர் என்ற பெயரும் உண்டு. இறைவனை வழிபட வந்த ஏலேலோ சிங்கர், திருவள்ளுவருக்கு கோவில் கட்டியிருக்கலாம் என தெரிகிறது. திருவொற்றியூர், தேரடி, ஈசாணி மூர்த்தி கோவில் தெரு சந்திப்பில், 20 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. பின் நாளில் காணாமல் போய் விட்டது.திருவொற்றியூர் நலசங்கத்தினர் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். பாரதி பாசறை தீர்மானங்கள் வாயிலாக வலியுறுத்தி வந்தது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், 90 லட்ச ரூபாய் மதிப்பில் கோவில் அமைய உள்ளதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது.வரலாற்று தொடர்புடைய கோவிலை, மீட்டுருவாக்கம் செய்வதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us