Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெங்கீஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் நீக்கம் செல்லும்

வெங்கீஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் நீக்கம் செல்லும்

வெங்கீஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் நீக்கம் செல்லும்

வெங்கீஸ்வரர் தேவஸ்தான அறங்காவலர் நீக்கம் செல்லும்

ADDED : ஜூன் 28, 2024 12:16 AM


Google News
சென்னை, வடபழனி வெங்கீஸ்வரர் அழகர் பெருமாள், நாகாத்தம்மன் கோவில் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, பிரேம் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து, பிரேம் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்த மனு:

வடபழனியில் உள்ள வெங்கீஸ்வரர் அழகர் பெருமாள் மற்றும் நாகாத்தம்மன் கோவில் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக கடந்த 1990 ஜனவரியில் பொறுப்பேற்றேன். கோவில் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன்.

கோவில் ஆவணங்களை, அறநிலையத்துறை அதிகாரி ஆய்வு செய்து, 2012 மார்ச்சில் 'நோட்டீஸ்' அனுப்பினார். சில குற்றச்சாட்டுக்கு நான் பதில் அளித்தேன். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி, என்னை பரம்பரை அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கி, 2015 அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன்.

அறநிலையத்துறை உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது. பின் விசாரணை நடத்தப்பட்டு, மீண்டும் என்னை நீக்கி, கடந்த பிப்ரவரியில் அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு எதிராக, ஆறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இதற்கு, மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 12 மனைகள் விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மட்டும் கைவிட்டு, மற்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை முடிவுக்கு வந்துள்ளது.

மனுதாரர் அளித்த விளக்கம் திருப்தி இல்லாததால், அறநிலையத்துறை இந்த முடிவுக்கு வந்துள்ளது.

மூன்று குற்றச்சாட்டுகளை, அறநிலையத்துறை முறையாக பரிசீலித்து, முடிவுக்கு வந்துள்ளது. இதில், எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே, அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us