/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓட்டு எண்ணிக்கையில் நீடித்த குழப்பம் ஓட்டு எண்ணிக்கையில் நீடித்த குழப்பம்
ஓட்டு எண்ணிக்கையில் நீடித்த குழப்பம்
ஓட்டு எண்ணிக்கையில் நீடித்த குழப்பம்
ஓட்டு எண்ணிக்கையில் நீடித்த குழப்பம்
ADDED : ஜூன் 06, 2024 12:31 AM
சென்னை, சென்னை ராணிமேரி கல்லுாரியில், வடசென்னை தொகுதியில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது.
சட்டசபை வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதிகபட்சமாக, திருவொற்றியூர் தொகுதியில், 23 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.
இறுதி சுற்றுகள் முடிந்து முடிவுகள், பலகையில் எழுதப்பட்டது. அதில், தபால் ஓட்டு நீங்கலாக, தி.மு.க., வேட்பாளர் கலாநிதி 4,95,317 ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கலாநிதிக்கு தபால் ஓட்டாக 1,600 ஓட்டுகள் கிடைத்தன. மொத்தம், 4,96,917 ஓட்டுகள் என்ற நிலை இருந்தது.
ஆனால், இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும், எண்ணப்பட்ட வேட்பாளர்களின் ஓட்டுகளிலும் மாறுபாடு இருந்தது.இதனால், தொழில்நுட்ப காரணங்களை கூறி, வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. மாறாக, கலாநிதி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது.
இதற்கிடையே, வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் குறித்த விபரம் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், 1,600 தபால் ஓட்டுகளுடன், கலாநிதி 4,97,333 ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 416 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்துள்ளது. இதுபோன்று, ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஓட்டு எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்பட்டது.
தென்சென்னையில் ஆறு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்ததால், வி.வி.பேட் வாயிலாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
வடசென்னை, தென்சென்னை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. அதற்கான மாற்றாக, வி.வி.பேட் வாயிலாக ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
சில தொழில்நுட்ப பிரச்னையால், வடசென்னையில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு எண்ணிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.