Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துரைப்பாக்கம் குடிநீர் திட்டம் ஆகஸ்டில் பணிகள் முடிக்க அதிகாரிகள் கெடு

துரைப்பாக்கம் குடிநீர் திட்டம் ஆகஸ்டில் பணிகள் முடிக்க அதிகாரிகள் கெடு

துரைப்பாக்கம் குடிநீர் திட்டம் ஆகஸ்டில் பணிகள் முடிக்க அதிகாரிகள் கெடு

துரைப்பாக்கம் குடிநீர் திட்டம் ஆகஸ்டில் பணிகள் முடிக்க அதிகாரிகள் கெடு

ADDED : ஜூலை 24, 2024 12:52 AM


Google News
சென்னை, சோழிங்கநல்லுார் மண்டலம் 193, 195, 196 ஆகிய வார்டுகளின் 630 தெருக்களில், 55,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மொத்தம் 2.30 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

மூன்று வார்டுகளில், குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கி, 2012ம் ஆண்டு, ஜி.கே.சி.விஸ்வா என்ற நிறுவனம் பணி துவங்கியது.

நிர்வாக குளறுபடி, ஒப்பந்த நிறுவனத்தின் வீழ்ச்சி போன்ற காரணத்தால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஜி.கே.சி.விஸ்வா நிறுவனத்திற்கு வாரியம் தடை விதித்தது. இதனால், மூன்று ஆண்டுகள் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த, 2019ல் 'கேயம்' என்ற நிறுவனத்தை வாரியம் நியமித்து, 18 கோடி ரூபாய் ஒதுக்கி, விடுபட்டதில் இருந்து பணி துவங்கியது.

ஆனால், முந்தைய நிறுவனம் பதித்த குழாய்கள் எங்கு இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் புதிய நிறுவனம் திணறியது.

போதிய ஆழத்தில் குழாய் பதிக்காமை, நீரோட்டமின்மை, நீர்த்தேக்க தொட்டி கட்டியதில் தொய்வு, குழாய்கள் சேதம் என, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால், ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 10 இடங்களிலாவது, குடிநீர் கசிவு ஏற்பட்டது.

இதற்கிடையில், 2023 மே மாதம், குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைத்தார். தொடர்ந்து, குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

ஆனால், பணி முழுமை பெறாததால், ஒப்பந்த நிறுவனம், குடிநீர் திட்டத்தை வாரியத்திடம் ஒப்படைக்கவில்லை.

இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, திட்டப்பணி மேற்பார்வை பொறியாளர் கந்தசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கவுன்சிலர்கள், கேயம் ஒப்பந்த நிறுவனம், வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், 193வது வார்டில் இம்மாதம் இறுதியிலும், 195, 196 ஆகிய வார்டுகளில், அனைத்து பணிகளையும் முடித்து, ஆக., 31ம் தேதிக்குள் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்திற்கு கெடு விதிக்கப்பட்டது.

மேலும், பணி முடிந்த தெருக்களில், பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us