/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... புது முயற்சி! 23 இடத்தில் சுத்திகரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... புது முயற்சி! 23 இடத்தில் சுத்திகரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... புது முயற்சி! 23 இடத்தில் சுத்திகரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... புது முயற்சி! 23 இடத்தில் சுத்திகரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... புது முயற்சி! 23 இடத்தில் சுத்திகரிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 07, 2024 11:35 PM

சென்னை, : சென்னையில் கூவம் ஆற்றில் கழிவுநீர் செல்வதை தடுக்கும் வகையில், 23 இடங்களில் கழிவு உந்துநீர் நிலையம் அமைத்து, சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கூவம் கிராமம் தான், கூவம் ஆற்றின் பிறப்பிடம். கேசவரம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கிளை ஆறாக உருவாகி, 72 கி.மீ., தவழ்ந்து, சென்னை நேப்பியார் பாலம் அருகே மெரினாவில் சங்கமிக்கிறது.
ஆவடி, திருவேற்காடு, மதுரவாயல் வழியாக பயணம் செய்து, சென்னையில் முகப்பேர், கோயம்பேடு, அண்ணா நகர், அமைந்தகரை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட வழியாக நேப்பியார் பாலம் வரை 18 கி.மீ., கூவம் ஆறு பயணம் செய்கிறது.
கூவம் ஆறு, சென்னை மாநகரில் உருவாகும் கழிவுநீரை வெளியேற்றும் வழித்தடமாக மாறியதால், எப்போதும் துர்நாற்றம் வீசி, சாக்கடையாகவே மாறியுள்ளது.
மாநகரின் அடையாளங்களில் ஒன்றான கூவம் ஆறு, வடகிழக்கு பருவமழை காலங்களில், தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும் என, பருவமழை வெள்ளம் போன்ற காலங்களில் நமக்கு பாடம் கற்பித்து உள்ளது.
ஆனாலும், கூவம் ஆற்றில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் சட்டவிரோதமாக விடுவதால், எந்நேரமும் அசுத்தமாகவே காணப்படுகிறது.
அரசு சார்பில் கூவம் ஆற்றை துாய்மைப்படுத்த, அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக, அடையாறு, கூவம் ஆறுகளில், பல்வேறு இடங்களில், கழிவு உந்துநீர் நிலையம் அமைத்து, கோயம்பேடு, பெருங்குடி, கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அங்கு சுத்திகரிக்கப்படும் நீர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், மணலி உள்ளிட்ட பகுதிகளின் தொழிற்சாலைகளில் பயன்படுத்த, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் வழங்கி வருகிறது. ஆனாலும், தொடர்ந்து கூவம் ஆற்றில் கழிவுநீர் விடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், கூவம் ஆற்றில் கழிவுநீர் செல்வதை தடுக்கும் வகையில் மேலும், 23 இடங்களில் கழிவு உந்துநீர் நிலையம் அமைக்க, 50 கோடி ரூபாயை ஒதுக்கி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கூவம், ஆடையாறு ஆறுகளில் கழிவுநீர் செல்வதை தடுக்க, ஏற்கனவே பல இடங்களில் கழிவு உந்துநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாக, ஆறுகளில் கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு, நிலையம் வாயிலாக, கோயம்பேடு, பெருங்குடி, கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்பி விடப்படும்.
கோயம்பேடு, கொடுங்கையில் தினமும் தலா 4.5 கோடி லிட்டர்; பெருங்குடியில் 1 கோடி லிட்டர் என, 10 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட உள்ளது.
அதேபோல், 23 இடங்களில் கழிவு உந்துநீர் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் விரைவில் துவங்கும்.
அதேபோல், கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலை மற்றும் 52 கிளை கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.