Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவின் பால் பாக்கெட் தயாரிப்பு பாதிப்பு சென்னையில் நுகர்வோர்கள் அவதி

ஆவின் பால் பாக்கெட் தயாரிப்பு பாதிப்பு சென்னையில் நுகர்வோர்கள் அவதி

ஆவின் பால் பாக்கெட் தயாரிப்பு பாதிப்பு சென்னையில் நுகர்வோர்கள் அவதி

ஆவின் பால் பாக்கெட் தயாரிப்பு பாதிப்பு சென்னையில் நுகர்வோர்கள் அவதி

ADDED : ஜூன் 08, 2024 12:30 AM


Google News
சென்னை,மாதவரம் மத்திய பால் பண்ணையில் 'ஆவின்' நிர்வாகம் தினம், 5 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்கிறது.

மொத்த விற்பனையாளர்களுக்கு இரவு 11:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரையும், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பாலகங்களுக்கு காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையும், பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு, ஒப்பந்த வாகனங்களில் அனுப்பப்படும்.

ஆனால், நேற்று முன்தினம் இரவு முதல், பால் பாக்கெட் உற்பத்தி முடங்கியது. இதனால், இரவு மற்றும் அதிகாலை பால் ஏற்றிய வாகனங்கள் புறப்படுவது தாமதம் ஆனது.

காலை 11:00 மணி முதல், பால் பாக்கெட் தயாரிப்பு மீண்டும் துவங்கியது. மதியத்திற்கு பின், வாகனங்களில் ஏற்றி அனுப்பப்பட்டன. இதனால், குழந்தைகள், முதியோருக்கு பால் கிடைக்காமல், நேற்று காலை முதல் நுகர்வோர்கள் அவதிக்குள்ளாகினர்.

கொளத்துார், பெரம்பூர் வியாசர்பாடி, மணலி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில், ஆவின் பால் அட்டைதாரர்கள், பாலகங்களில் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

தனியார், பால் கொள்முதல் அதிகரித்து ஆவின் பால் கொள்முதல், பல மாவட்டங்களில் குறைந்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக பாலை சேகரித்து எடுத்துவந்து, சென்னையில் பால் பாக்கெட் தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஊருக்கு சென்றவர்கள், 9ம் தேதி சென்னை திரும்புவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் முதல், சென்னைக்கு திரும்பியதால், ஆவின் பால் தேவை அதிகரித்து, 25,000 லிட்டர் வரை பற்றாக்குறை ஏற்பட்டது.

இதுகுறித்து பால் முகவர்கள், ஆவின் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பிரச்னையை தீர்க்கும் வகையில், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து, பால் எடுத்து வரப்பட்டு, வினியோகிக்கப்பட்டது.

வினியோகம் தாமதம் ஏன்?

மாதவரம் பால் பண்ணையில், ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை காலதாமதம் ஆனதால், சிறிது நேரம், மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும் பால் வாகனங்கள், பண்ணையை விட்டு தாமதமாக வெளியேறின. உடனடியாக அனைத்து மொத்த விற்பனையாளர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, பால் வினியோகத்தை தொடர்ந்து கண்காணித்து, அனைத்து சில்லரை விற்பனையாளர்களுக்கும் பால் வினியோகிக்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து எவ்விதமான புகார்களும் பெறப்படவில்லை.

- வினீத்,

நிர்வாக இயக்குனர், 'ஆவின்'





      Our Apps Available On




      Dinamalar

      Follow us