Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நெமிலிச்சேரி ஊராட்சி முறைகேடு விவகாரம் நடவடிக்கை எடுப்பதில் கலெக்டர் மவுனம்

நெமிலிச்சேரி ஊராட்சி முறைகேடு விவகாரம் நடவடிக்கை எடுப்பதில் கலெக்டர் மவுனம்

நெமிலிச்சேரி ஊராட்சி முறைகேடு விவகாரம் நடவடிக்கை எடுப்பதில் கலெக்டர் மவுனம்

நெமிலிச்சேரி ஊராட்சி முறைகேடு விவகாரம் நடவடிக்கை எடுப்பதில் கலெக்டர் மவுனம்

ADDED : ஜூன் 24, 2024 02:05 AM


Google News
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெமிலிச்சேரி ஊராட்சி. 12,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்கு, தி.மு.க., - 4; ம.தி.மு.க., - 2; அ.தி.மு.க., - 2; மற்றும் ஒரு சுயேச்சை என, 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

ஊராட்சி தலைவராக தமிழ்செல்வி உள்ளார்.

'பொது பிரச்னையில் இவரது நடவடிக்கைகள் அதிருப்தியடைய செய்துள்ளது; ஒவ்வொரு பிரச்னைக்கும் வீதியில் இறங்கி போராடி தீர்வு காண வேண்டி உள்ளது' என, அங்கலாய்க்கின்றனர்.

தமிழக ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி, குறைந்தபட்சம் 60 நாட்களுக்குள் ஒரு ஊராட்சி மன்ற கூட்டம் நடத்த வேண்டும்; ஆனால், நெமிலிச்சேரியில் மாதாந்திர கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், பல வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த ஆண்டு செப்., மாதத்திற்கு பின், எட்டு மாதங்களாக மாதாந்திர கூட்டம் நடைபெறவில்லை. அன்றைய கூட்டத்திலும், உறுப்பினர்கள் முறையாக கையெழுத்திடாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கண்டுக்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிருப்தி அடைந்த வார்டு உறுப்பினர்கள், நெமிலிச்சேரி ஊராட்சியில் நடக்கும் பிரச்னை குறித்து திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

அதில், 'சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளின் முறைகேடுகள்; மாதாந்திர கூட்டம் முறையாக நடத்தப்படாதது; பொதுமக்களிடம் அவர்கள் பெறும் லஞ்சம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தனர்.

நெமிலிச்சேரி ஊராட்சியின் ஒன்பது வார்டு உறுப்பினர்களும் கையெழுத்திட்ட அந்த புகாரை, கடந்த பிப்., 5ம் தேதி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எட்டு மாதத்திற்கு பின், கடந்த 20ம் தேதி, நெமிலிச்சேரி ஊராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்; மற்றவர்கள் வராததால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

எனவே சம்பந்தப்பட்ட திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், மவுனம் காக்காமல், நெமிலிச்சேரி மக்கள் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

- -நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us