Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தானியங்களில் பூச்சியை தடுக்க நடவடிக்கை இந்திய உணவு கழகம் விளக்கம்

தானியங்களில் பூச்சியை தடுக்க நடவடிக்கை இந்திய உணவு கழகம் விளக்கம்

தானியங்களில் பூச்சியை தடுக்க நடவடிக்கை இந்திய உணவு கழகம் விளக்கம்

தானியங்களில் பூச்சியை தடுக்க நடவடிக்கை இந்திய உணவு கழகம் விளக்கம்

ADDED : ஜூன் 10, 2024 01:57 AM


Google News
சென்னை:'பட்டாபிராம் ஆவடி கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் தானிய மூட்டைகளில் பூச்சிகள் வருவதை தடுக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்' என, இந்திய உணவு கழகம் தெரிவித்து உள்ளது.

இந்திய உணவு கழகத்திற்கு, சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில், 1.71 லட்சம் டன் கொள்ளளவில் கிடங்கு உள்ளது. இது, நாட்டிலேயே இரண்டாவது பெரிய கிடங்காக திகழ்கிறது.

ஆவடி கிடங்கில், ஒரு 'ஸ்டாக்ஸ்' எனப்படும் அடுக்கில் சராசரியாக 3,000 தானிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால், பட்டாபிராம் மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 3ம் தேதி செய்தி வெளியானது.

இதற்கு, இந்திய உணவு கழகம் விளக்கம் அளித்துள்ளதாவது:

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் தர கட்டுப்பாடு உதவியாளர்களால், கிடங்கில் உள்ள 100 சதவீத தானிய இருப்பும் ஆய்வு செய்யப்படுகிறது. பூச்சியை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பான் தெளிக்கப்படுகிறது.

மேலாளர்கள் மாதந்தோறும் மொத்த இருப்பில், 33 சதவீதம் அரிசியையும்; 100 சதவீதம் கோதுமையையும் ஆய்வு செய்கின்றனர்.

ஏதேனும், 'ஸ்டாக்ஸ்' பூச்சிகளால் பாதிக்கப்பட்டதாக அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டால், அதே ஸ்டாக்ஸ் ஏழு நாட்களுக்குள், 'பியூமிகேஷன்' எனப்படும் தார்பாலினால் மூடப்பட்டு, அலுமினியம் பாஸ்பேட் மாத்திரை வைக்கப்படும்.

அதிலிருந்து வெளியேறும் வாயு, பூச்சிகளை அழிக்கும்.

பூச்சி இல்லாத நிலையில், உணவு தானியங்கள் பொது வினியோக திட்டத்திற்கு வழங்கப்படுகின்றன. பருவ மழைக்கு முந்தைய ஆய்வு மே முதல் துவங்கியுள்ளது.

மொத்த கொள்ளளவு, 1.71 லட்சம் டன் உணவு தானியங்களில், 1.15 லட்சம் டன் எவ்வித இடையூறும் இல்லாமல் பியூமிகேஷன் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

பூச்சி தொந்தரவு பற்றி தர கட்டுப்பாடு ஊழியர்கள், அதிகாரிகள் கண்டறிந்தால், உடனடி மருந்து தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக, 4ம் தேதி, மண்டல அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஏழு பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், 9.76 சதவீதம் மட்டுமே பூச்சி கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஸ்டாக்சை உடனே பியூமிகேஷன் செய்முறை செய்யுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

தர கட்டுப்பாடு செயல்பாடுகள், எந்த இடையூறும் இன்றி நடக்கின்றன என்பது தெளிவாகிறது. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us