Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'புதையல்' நகைகளுக்கு மயங்கி ரூ.5 லட்சம் ஏமாந்த கடைக்காரர்

'புதையல்' நகைகளுக்கு மயங்கி ரூ.5 லட்சம் ஏமாந்த கடைக்காரர்

'புதையல்' நகைகளுக்கு மயங்கி ரூ.5 லட்சம் ஏமாந்த கடைக்காரர்

'புதையல்' நகைகளுக்கு மயங்கி ரூ.5 லட்சம் ஏமாந்த கடைக்காரர்

ADDED : ஜூலை 31, 2024 12:06 AM


Google News
குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம், தனபால் தெருவில் குமாரசாமி, 59; மளிகை கடைக்காரர். கடந்த 14ம் தேதி கடைக்கு வந்த நபர், தன் பெயர் கிஷோர் எனக்கூறி அறிமுகம் செய்துள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு சில்லரை எடுப்பது போல், பாக்கெட்டில் இருந்து, சில வெள்ளி நாணயங்களை குமாரசாமியிடம் காண்பித்துள்ளார்.

அப்போது, 'இந்த நாணயம் உங்களுக்கு எப்படி கிடைத்தது' என, குமாரசாமி கேட்டுள்ளார்.

தான் கூலி வேலை செய்து வருவதாகவும், வேலை செய்யும் இடத்தில் பள்ளம் தோண்டும்போது, கொஞ்சம் தங்க நகைகளும், சில வெள்ளி நாணயங்களும் கிடைத்தன' என, அந்த நபர் கூறியுள்ளார்.

மேலும், 'தன் மகளின் திருமண தேவைக்காக கொஞ்சம் விற்பனை செய்ய உள்ளதாகவும், உங்களுக்கு தேவை என்றால், வாங்கிக் கொள்ளுங்கள்' என்றும் கூறி, தன்னுடைய மொபைல் போன் எண்ணை கொடுத்து சென்றுள்ளார்.

அடுத்த நாள் வந்து, இரட்டை தங்க சங்கிலியை கொடுத்து, நீங்கள் பரிசோதித்து பார்த்த பின்னர் வாங்கிக் கொள்ளுங்கள் எனக்கூறி, உண்மையான தங்க சங்கிலியை கொடுத்துள்ளார். குமாரசாமி அதை வாங்கி, அருகில் உள்ள நகைக் கடையில் பரிசோதித்து பார்த்தபோது, உண்மையான நகை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஜூலை 24ம் தேதி, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கிேஷாரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து, நகைகளை வாங்கி சென்றுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில், 'போலி நகைகள் கொடுத்து ஏமாற்றியவர்கள் கைது' என, பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்து அச்சம் அடைந்த குமாரசாமி, தான் வாங்கிய நகையை பரிசோதித்து பார்த்தபோது, அவை போலி என்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்தவர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us