Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் கட்டட அனுமதி 13 உள்ளாட்சிகளுக்கு 5 அதிகாரிகள்

சென்னையில் கட்டட அனுமதி 13 உள்ளாட்சிகளுக்கு 5 அதிகாரிகள்

சென்னையில் கட்டட அனுமதி 13 உள்ளாட்சிகளுக்கு 5 அதிகாரிகள்

சென்னையில் கட்டட அனுமதி 13 உள்ளாட்சிகளுக்கு 5 அதிகாரிகள்

ADDED : ஜூன் 23, 2024 01:08 AM


Google News
சென்னை:சென்னை பெருநகர எல்லைக்குள் மூன்று மாநகராட்சிகள், ஐந்து நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், அதிகார பகிர்வு அடிப்படையில் கட்டுமான திட்ட அனுமதி பணிகளை மேற்கொள்கின்றன.

ஆனால், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுமான திட்ட அனுமதி பணிகளில் ஈடுபட வல்லுனர்கள் இல்லை. இதனால், இந்த உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி கோப்புகளை ஆய்வு செய்ய சி.எம்.டி.ஏ.,வில் இருந்து உதவி திட்ட அலுவலர்கள், திட்ட உதவியாளர்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

ஓராண்டாக, இது போன்ற பணிக்கு ஒதுக்கப்படும் அதிகாரிகள், உள்ளாட்சிகளுக்கு செல்லாமல் தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே கோப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

இந்த வகையில் ஜூன், ஜூலை மாதத்துக்கான அதிகாரிகளை ஒதுக்கி சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, பரங்கிமலை, காட்டாங்குளத்துார் ஊராட்சி ஒன்றியங்களில் உதவி திட்ட அலுவலர் கிருஷ்ணா, வில்லிவாக்கம், பூந்தமல்லி, திருமழிசை ஊராட்சி ஒன்றியங்களுக்கு திட்ட உதவியாளர் மேதினி தேவி, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு திட்ட உதவியாளர் கே. கவுரி கட்டட அனுமதி கோப்புகளை கவனிப்பார்.

இதே போன்று, நாரவாரிகுப்பம் பேரூராட்சி, மீஞ்சூர் பேரூராட்சி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு திட்ட உதிவியாளர் ஜி. மாணிக்கவாசகம், புழல், சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு திட்ட உதவியாளர் டி. திரிபுரசுந்தரி கட்டட அனுமதி கோப்புகளை கவனிப்பார்.

ஜூலை, 31 வரை இவர்கள் இந்த பணிகளை எழும்பூர் அலுவலகத்தில் இருந்தபடியே கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த பொறியாளர்கள் எங்கே?


ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளை ஆய்வு செய்து உதவுவதற்காக, ஒப்பந்த அடிப்படையில் 140 பொறியாளர்களை சி.எம்.டி.ஏ., தேர்வு செய்துள்ளது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், எந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு யார் செல்ல வேண்டும் என்பதை இறுதி செய்வதிலும், இவர்களுக்கான ஊதியத்தை யார் வழங்குவது என்பதை முடிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்போதும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகளே இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us