Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஒத்திவாக்கம் சாலையில் போக்குவரத்துக்கு தடை! மேம்பால பணியை வேகப்படுத்த நடவடிக்கை

ஒத்திவாக்கம் சாலையில் போக்குவரத்துக்கு தடை! மேம்பால பணியை வேகப்படுத்த நடவடிக்கை

ஒத்திவாக்கம் சாலையில் போக்குவரத்துக்கு தடை! மேம்பால பணியை வேகப்படுத்த நடவடிக்கை

ஒத்திவாக்கம் சாலையில் போக்குவரத்துக்கு தடை! மேம்பால பணியை வேகப்படுத்த நடவடிக்கை

ADDED : ஜூலை 31, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு: ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையிலான போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. அதிக அளவிலான வாகன போக்குவரத்தால், கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால், போக்குவரத்தை முழுமையாக தடை செய்து, மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே கடவுப்பாதை உள்ளது. இப்பகுதி கிராமவாசிகள், பள்ளி, கல்லுாரி, அத்தியாவசிய தேவை, அரசு மருத்துவமனை மற்றும் வெளியிடங்களுக்கு, அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் செல்கின்றனர்.

அப்போது, கடவுப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில், அடிக்கடி கடவுப்பாதை மூடப்படுகிறது.

இதனால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பின், ரயில்வே துறையினர், கடவுப்பாதை வழியாக கடந்து செல்லும் வாகனங்களை கணக்கெடுப்பு நடத்தியதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதை உறுதிப்படுத்தினர்.

இதனால், ரயில்வே மேம்பாலம் கட்டலாம் என, உயர் அதிகாரிகளிடம் ரயில்வே துறையினர் பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே, 2011 - -12ம் ஆண்டு, 30.40 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரயில்வே துறையினர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், தண்டவாளப் பகுதியில் மேம்பாலப் பணியை ரயில்வே நிர்வாகம் முடித்தது.

நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலப் பணியை துவக்காமல் கிடப்பில் போட்டனர். 2018ம் ஆண்டு, 33.24 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியது.

இப்பணிக்கு, 2022ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது. 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேம்பாலப் பணிக்கு, 26.58 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. இப்பணியை, ஈரோடு மயான்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரயில்வே மேம்பாலப் பணியை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி, சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

இப்பணி, வரும் செப்., 5ம் தேதிக்குள் முடிக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

அதன்பின், ரயில்வே கடவுப்பாதையில் இருந்து, திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

ஒத்திவாக்கம் பகுதியில் பணிகள் துவக்கப்படவில்லை. பணிகள் நடைபெறும் பகுதியில், வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால், பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

அதனால், அப்பகுதியில் வாகனங்களுக்கு தடை விதிக்க, நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்து, கடந்த ஜூன் மாதம் கலெக்டரிடம் அனுமதி பெற்றனர். எனவே, மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் ரயில்வே மேம்பாலப் பணி, முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளை முழுமையாக முடிக்க, போக்குவரத்து மாற்றம் செய்துள்ளோம். வரும் ஆக., முதல் வாரத்தில் பணிகள் துவங்கி, டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.

- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

செங்கல்பட்டு

போக்குவரத்து மாற்றம்

செங்கல்பட்டு - பொன்விளைந்தகளத்துார் செல்லும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வழியாக, ஒழலுார், மணப்பாக்கம், உதயம்பாக்கம் சென்று, பொன்விளைந்தகளத்துார் செல்ல வேண்டும்.ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே, வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் வழியாக, கம்பெனி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், திருக்கழுக்குன்றம் சென்று, பொன்விளைந்தகளத்துார் செல்ல வேண்டும். படாளம் கூட்டு சாலை வழியாக, பொன்விளைந்தகளத்துாருக்கு வாகனங்கள் செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றத்திற்கான அனுமதியை, நெடுஞ்சாலைத்துறைக்கு கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us