/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு...எப்போது?: சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தல்செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு...எப்போது?: சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தல்
செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு...எப்போது?: சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தல்
செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு...எப்போது?: சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தல்
செங்கை நகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு...எப்போது?: சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 06, 2024 07:34 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியுடன் 15 ஊராட்சிகளை இணைக்கும் திட்டம், அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் சட்டசைபை கூட்டத்தில், இணைப்பு பற்றி அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு நகராட்சி, 1889ம் ஆண்டு உருவானது. இது, தமிழகத்தில் இரண்டாவது நகராட்சியாகும். 1947ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாவும், 1972ம் ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சி, 6.09 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சப்- - கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வங்கிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. நகரில், பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் இல்லை.
நகராட்சியில், வீட்டு வரி, சொத்து வரியினங்கள் வாயிலாக மட்டும், நிர்வாகத்திற்கு அதிக அளவில் வருவாய் வருகிறது.
நத்தம், அனுமந்தபுத்தேரி, மும்மலை, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலமாகவும், தொல்லியல் துறை இடமாகவும் உள்ளது.
இங்கு வசிக்கும் மக்களிடம், வீடு, நிலம், குடிநீர் போன்ற வரியினங்களை வசூலிப்பதில், நகராட்சிக்கு சிக்கல் உள்ளது.
இது போன்ற காரணங்களால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறவேற்ற, ஒவ்வொரு திட்டத்திற்கும், மாநில அரசிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நகரில், அடிப்படை வசதிகளை செய்து தர, 10 கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவைப்படுகிறது. நகரட்சியின் எல்லைப்பகுதியை விரிவுபடுத்துவதன் வாயிலாக வருவாயை பெருக்குவது குறித்து, நகராட்சி நிர்வாகம் ஆலோசித்தது.
இதையடுத்து, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், மேலமையூர், வல்லம், வீராபுரம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் திருமணி ஊராட்சியும் என, 15 ஊராட்சிகளை, செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்க, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால், பெருநகராட்சியாக தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் கருதுகின்றனர். அதன்பின், 15 ஊராட்சிகளை இணைக்க, அப்போதைய மாவட்ட கலெக்டர், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தார்.
கருத்துரு அனுப்பி மூன்று ஆண்டுகள் ஆகியும், அரசு பரிசீலனையில் இருப்பதாகக் கூறி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சி மானியக் கோரிக்கையில், 15 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி வளர்ச்சி அடைய வேண்டுமெனில், நகரை சுற்றியுள்ள 15 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என, கடந்த பல ஆண்டுகளாக, கலெக்டர், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகிறோம். வரும் சட்டசபை கூட்டத்தொடரில், ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை, முதல்வர் அறிவிக்க வேண்டும்.
- கே.வாசுதேவன்,
செயலர்,
நகர வளர்ச்சி மன்றம்,
செங்கல்பட்டு.
செங்கல்பட்டு நகராட்சியுடன் காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சியும் என, 15 ஊராட்சிகளை இணைப்பது குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், ஊராட்சிகளை இணைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகராட்சி அதிகாரிகள்,
செங்கல்பட்டு.