Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அடிப்படை வசதிகள் இல்லையென புகார்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அடிப்படை வசதிகள் இல்லையென புகார்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அடிப்படை வசதிகள் இல்லையென புகார்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அடிப்படை வசதிகள் இல்லையென புகார்

ADDED : செப் 10, 2025 02:44 AM


Google News
மேலக்கோட்டையூர்:மேலக்கோட்டையூர், தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலையில், நடப்பு ஆண்டிற்கான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நேற்று நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்க வந்த வீரர்களுக்கு உரிய வசதி செய்து தரப்படவில்லை எனவும், நடுவர்கள் நேர்மையாக பணியாற்றவில்லை எனவும், புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த மேலக்கோட்டையூரில், தமிழ்நாடு விளையாட்டுப்பல்கலை உள்ளது.

இங்கு, நடப்பாண்டு, முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

அதன்படி, நேற்று நடைபெற்ற சிலம்பம் போட்டியில், 1,300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆனால், வீரர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என, பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து வீரர்கள் கூறியதாவது:

முதல்வர் கோப்பைக்காக, மாவட்ட அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு, 37 கோடி ரூபாய் பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீரர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஓய்வு எடுப்பதற்கான இடங்கள் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்யப்படவில்லை.

சிலம்பம் போட்டியில் பங்கேற்க, மாவட்டம் முழுதும் இருந்து, 1,300க்கும் மேற்பட்ட வீரர்கள், நேற்று காலை வந்தனர்.

ஆனால், வீரர்களுக்கு உரிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை.

தவிர, சிலம்பம் போட்டியில் நடுவர்களாக பணியாற்றுகிறவர்கள், தங்கள் அமைப்பு சார்ந்த வீரர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கி, வெற்றி பெறச் செய்கின்றனர்.

முதல்வர் கோப்பை விளையாட்டுக்காக, தமிழக அரசு பெரிய அளவில் நிதி ஒதுக்கினாலும், களத்தில் அதைச் செயல்படுத்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் நடக்கின்றனர்.

எனவே, உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us