ADDED : ஜூலை 11, 2024 12:36 AM
சென்னை:சென்னை திருவல்லிக்கேணி, சிங்கராச்சாரி தெருவைச் சேர்ந்தவர் முகமது யூசுப், 17. வீட்டிற்கு அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 பயில்கிறார்.
நேற்று முன்தினம்இரவு, வீட்டின் வாசலில் நின்றபடி, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற மாடு, திடீரென அவரை முட்டியது. முகமது யூசுப்புக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், மாட்டை விரட்டி, மாணவனை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
சம்பவம் குறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.