ADDED : ஜூலை 23, 2024 06:50 PM

சென்னை: மனநலம் குன்றியோரைப் பராமரிப்பதற்காக நிதி திரட்ட, சுவாமி தயானந்த சரஸ்வதிகளின் 'தயானந்த கிருபா இல்லம்', சென்னையில் 'கிருஷ்ண கான இசை நிகழ்ச்சி'யை நடத்துகிறது.
சென்னை, மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் வரும் ஜூலை 27ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரபல ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களான ஜெயதீர்த் மேவுண்டி, பிரவீன் கோட்ஹிந்தி உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று பாட உள்ளனர்.
1998ம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதிகளால், ஸ்ரீபெரும்புதூர் மடுவாங்கரையில், 'சுவாமி தயானந்த கிருபா இல்லம்' துவங்கப்பட்டது. 26 ஆண்டுகளாக சேவை செய்து வரும் இந்த இல்லத்தில்,18 முதல் 65 வயது வரை உள்ள மனநலம் குன்றிய 36 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கான தினசரி பராமரிப்பு, உணவு செலவுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. நிதி திரட்ட இந்நிகழ்ச்சியை 'சுவாமி தயானந்த கிருபா இல்லம்' ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்க ரூ.250 முதல் 1,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் மூலமாக திரட்டப்படும் பணம் முழுதும், மனநலம் குன்றியோர் பராமரிப்பதற்காக செலவிடப்பட உள்ளது.
இதற்கான டிக்கெட்டுக்களை https://www.mdnd.in/newevent/viewevent/OTQ5NyMzNSMxMDEjMg என்ற இணையதளத்தில் பெறலாம். 9500060153 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பெறலாம்.