
யாருக்கு வாய்ப்பு
பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கிளாசன் கைகொடுத்தார். 15 ஓவரில் 147/4 ரன் எடுத்து வலுவாக இருந்தது. கடைசி 30 பந்தில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டன. ஓவருக்கு 6 ரன் தான் தேவை. கைவசம் 6 விக்கெட் இருந்தது. அப்போது யாருக்கு வெற்றி வாய்ப்பு... என்ற கம்ப்யூட்டர் கணிப்பில் தென் ஆப்ரிக்காவுக்கு 96.65 சதவீதம், இந்தியாவுக்கு 3.35 சதவீதம் என காண்பிக்கப்பட்டது.
பும்ரா, பாண்ட்யா திருப்பம்
கடைசி 5 ஓவரில் இந்திய பவுலர்கள் பிடியை இறுக்கினர். 16வது ஓவரில் பும்ரா 4 ரன் கொடுத்தார். 17வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் கிளாசன் (52) அவுட்டாக, இந்தியாவுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. 18வது ஓவரை வீசிய பும்ரா, 2 ரன் மட்டும் கொடுத்து யான்செனை வெளியேற்றினார். 19வது ஓவரை வீசிய அர்ஷ்தீப், 4 ரன் மட்டும் கொடுத்தார்.
மைதானத்தில் உற்சாகம்
கடந்த 2007ல் தோனி தலைமையில் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினர், 17 ஆண்டுக்கு பின் மீண்டும் கோப்பை கைப்பற்றினர். இம்மகிழ்ச்சியில் கேப்டன் ரோகித், கோலி உள்ளிட்ட வீரர்கள், கென்சிங்டன் மைதானத்தில் ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டனர். கோலி, அர்ஷ்தீப், அக்சர் படேல், சிராஜ், ரிங்கு சிங் சேர்ந்து தலேர் மெகந்தியின் 'துனக் துனக் துன்' பாடலுக்கு பஞ்சாப் 'பாங்க்ரா' நடனமாடினர். ரசிகர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கார் விபத்தில் இருந்து மீண்ட ரிஷாப் பன்ட், இத்தொடரில் முத்திரை பதித்தார். இவர், ரசிகர் ஒருவருக்கு தனது 'ஷூ'வை அன்பளிப்பாக வழங்கினார். அர்ஷ்தீப் தனது பதக்கத்தை பெற்றோருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
வாழ்வின் சிறந்த தருணம்
கேப்டன் ரோகித் கூறுகையில்,''இந்திய அணிக்கு கோப்பை வென்று தருவதே இலக்காக இருந்தது. உலக கோப்பை வென்றது என் வாழ்வின் சிறந்த தருணம்,'' என்றார்.