Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: கோப்பை வென்று அசத்தல்

'சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: கோப்பை வென்று அசத்தல்

'சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: கோப்பை வென்று அசத்தல்

'சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: கோப்பை வென்று அசத்தல்

ADDED : ஜூலை 31, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
பல்லேகெலே: மூன்றாவது 'டி-20' போட்டியில் 'சூப்பர் ஓவரில்' வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. சொந்த மண்ணில் இலங்கை அணி ஏமாற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது.

முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. பல்லேகெலேயில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. மழையால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

'டாப்-ஆர்டர்' சரிவு: இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (10), சஞ்சு சாம்சன் (0), ரிங்கு சிங் (1), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (8), ஷிவம் துபே (13) ஏமாற்றினர். இந்திய அணி 48 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த சுப்மன் கில், ரியான் பராக் ஜோடி அணியை மீட்டது. வணிந்து ஹசரங்கா வீசிய 14வது ஓவரில் ரியான் பராக் 2 சிக்சர் பறக்கவிட, 15 ரன் கிடைத்தன. ஹசரங்கா பந்தில் சுப்மன் கில் (39), ரியான் பராக் (26) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய வாஷிங்டன் 18 பந்தில் 25 ரன் விளாசினார்.

இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. பிஷ்னோய் (8) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தீக்சனா 3 விக்கெட் சாய்த்தார்.

சபாஷ் சூர்யகுமார்:எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (26), குசால் மெண்டிஸ் (43) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய 17வது ஓவரில் ஹசரங்கா (3), கேப்டன் அசலங்கா (0) அவுட்டாகினர். குசால் பெரேரா (46) நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டன. சூர்யகுமார் பந்துவீசினார். இரண்டாவது, 3வது பந்தில் கமிந்து மெண்டிஸ் (1), தீக்சனா (0) அவுட்டாகினர். அடுத்த இரண்டு பந்தில், 2 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட, 2 ரன் மட்டும் எடுக்கப்பட்டது.

இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன் மட்டும் எடுக்க, போட்டி 'டை' ஆனது.

'சூப்பர்' வெற்றி: பின் போட்டியின் முடிவு 'சூப்பர் ஓவருக்கு' சென்றது. இலங்கை அணி முதலில் 'பேட்' செய்ய, வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். குசால் பெரேரா (0), பதும் நிசங்கா (0) ஏமாற்றினர். இலங்கை அணி 0.3 ஓவரில், 2 ரன்னுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்தது. குசால் மெண்டிஸ் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

சுலப இலக்கை (3 ரன்) விரட்டிய இந்திய அணிக்கு தீக்சனா பந்துவீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்யகுமார் (4*) வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 0.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us