ADDED : ஜூலை 03, 2024 10:53 PM

சென்னை: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.
லோக்சபா தேர்தலில் தி.முக., வெற்றி பெற்றதும், கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக, ஒண்டிபுதுார் திறந்தவெளி சிறைச்சாலை, பாரதியார் பல்கலை பின்புறம், மத்திய சிறைச்சாலை மைதானம் ஆகிய இடங்கள் கண்டறியப்பட்டன.
கடந்த மாதம், அமைச்சர் உதயநிதி, கோவை, ஒண்டிபுதூரில் 30 ஏக்கர் பரப்பளவில், கைதிகள் விவசாயம் செய்யும் வகையில், அரசு புறம்போக்கு நிலமாக உள்ள திறந்தவெளி சிறைச்சாலை பகுதியை பார்வையிட்டார். அப்பகுதி, சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதால், அப்பகுதியே ஸ்டேடியம் அமைக்க தகுதியானதாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. அதை, விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நில மாறுதல் செய்யும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, தொழில் துறை அமைச்சர் ராஜா தலைமையில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.