Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இளைஞர்களின் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு திருப்பி விட வேண்டும் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

இளைஞர்களின் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு திருப்பி விட வேண்டும் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

இளைஞர்களின் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு திருப்பி விட வேண்டும் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

இளைஞர்களின் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு திருப்பி விட வேண்டும் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு

ADDED : ஜன 29, 2024 08:26 AM


Google News
புதுச்சேரி : இளைஞர்கள் சக்தியை ஒருங்கிணைக்கும்போது 2047இல் நாடு வளர்ச்சியடைந்து இருக்கும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

சுதந்திரம் அடைந்து நுாற்றாண்டை எட்ட உள்ளோம். இந்த நேரத்தில், வளர்ந்த பாரதமாக நாடு இருக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம். அதனால் தான், நாடு 2047ல் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இயக்கததை அவர் ஆரம்பித்துள்ளார்.

நாடு பல தியாகத்திற்கு பிறகு விடுதலை பெற்றுள்ளது. வளர்ச்சியடைந்த நாடாக இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எந்த வளர்ச்சியாக இருந்தாலும் அது இளைஞர்களின் சக்தியால் மட்டுமே சாத்தியமாகும். அதனால்தான் இளைஞர்களிடம் கருத்துகள், ஆலோசனைகள் கேட்கப் படுகின்றன.

இளைஞர்களின் போக்கு எப்படி வேண்டுமென்றாலும் திசை மாறும். பள்ளி பருவத்தில் இருக்கும் எண்ணம் கல்லுாரி பருவத்தில் வேறு மாதிரி இருக்கும். எனவே இளைஞர்களின் சக்தியை சிதறவிடாமல் நாட்டின் வளர்ச்சிக்கு திருப்பிவிட வேண்டும்.

உலகில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப புதிய கண்டுபிடிப்புகள் வரவேண்டும். இதுவும் இளைஞர்களால் தான் சாத்தியம் என்பதால் பிரதமர் இளைஞர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். இதற்கு புதுச்சேரியின் 30,600 இளைஞர்களுக்கும் மேல் பிரதமருக்கு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் கல்வி, சுகாதாரத்தில் முதலிடத்தில் உள்ளது.

நாட்டில் தற்போது நல்ல நிர்வாகம் இருக்கிறது. இளைஞர்களிடம் நிறைய சக்தி உள்ளது. இந்த சக்தியை ஒருங்கிணைக்கும்போது 2047 ல் பிரதமரின் எண்ணப்படி நாடு வளர்ச்சியடைந்து இருக்கும்.

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us